சிபிஐ அமைப்பையும், அதிகாரிகளையும் மத்திய அரசு காக்க வேண்டும்.. நாகேஸ்வர ராவ் கருத்து
டெல்லி:சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு காக்க வேண்டும் என்று சிபிஐ தற்காலிக தலைமை இயக்குனர் நாகேஸ்வர ராவ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாரதா நிதி நிறுவனம் பொது மக்களிடம் 30 ஆயிரம் கோடியை முதலீடாக பெற்று மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க திட்டமிட்டனர்.

2 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆணையர் ஆஜராக வில்லை. இதையடுத்து, நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ குழு கொல்கத்தா வந்தது. ஆணையர் விசாரணைக்கு வராததால் சிபிஐ அதிகாரிகளே நேரில் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்களை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர். சிபிஐ இணை இயக்குனரையும் கைது செய்ய மேற்கு வங்க போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.இதனிடையே, மேற்கு வங்க போலீசாரின் நடவடிக்கை குறித்து சிபிஐ தற்காலிக தலைமை இயக்குனர் நாகேஸ்வர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:எந்த புகாரின் பேரில், எந்த அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ... அதனை சிபிஐ அமைப்பு பின்பற்றுகிறது.
இந்த விவகாரத்தில் ராஜீவ் குமார் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படியே இந்த விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை ஏற்கனவே மேற்கு வங்க அரசு அமைத்திருக்கிறது.
அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் ஏற்கனவே கொண்டு சென்றுவிட்டனர். அந்த ஆதாரங்களையும் கொடுக்க அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications