9 தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் தடுப்பூசி? நோ,நோ ஆதாரமற்ற புகார் - அரசு மறுப்பு.. பின்னணி என்ன?
டெல்லி: வெறும் சில தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு, இந்தத் தடுப்பூசி கொள்கை அரசின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது.
தற்போதுதான் கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடத் தொடங்கியுள்ளன.
கடும் விமர்சனம்
நாட்டிலுள்ள 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவுவதால் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு போதியளவில் தடுப்பூசிகள் ஆர்டர் அளிக்கவில்லை என்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகளே தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சுகாதாரத் துறை விளக்கம்
இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை மூலம், பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் மருத்துவமனைகளுக்கு 25% தடுப்பூசிகளை ஒதுக்கப்படுகிறது.இது அரசின் தடுப்பூசி மையங்களில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது. பணம் செலுத்தக்கூடிய மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவோர் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கொள்கை
மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி கொள்கையின்படி, உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50% மத்திய அரசுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அதேபோல மீதி 50% டோஸ்களை, மருத்து நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்யலாம். தனியார் மருத்துவமனைகளில் மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கே தடுப்பூசிகள் அதிகம் செல்வதாகவும் இதனால் சிறு நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளால் தடுப்பூசிகளைப் பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டன.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு
இருப்பினும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இதை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். மேலும், இது பற்றி மத்திய சுகாதார துறை அமைச்சகம், "தனியார் மருத்துவமனைகள் மே மாதம் மட்டும் 1.20 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றுள்ளன. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு ஏராளமான தனியார் மருத்துவமனைகள் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த தனியார் மருத்துவமனைகள் பெருநகரங்களுக்கு மட்டும் இருப்பதில்லை. இவை நாடு முழுவதும் உள்ள டையர் 2 மற்றும் டையர் 3 நகரங்களிலிருந்தும் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட தடுப்பூசிகள் குறித்த நேற்று முக்கிய தகவல் வெளியானது. அதாவது கடந்த மே மாதம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்ட 1.20 கோடி தடுப்பூசிகளில் 60 லட்சத்தை வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் வங்கியுள்ளன. அப்பல்லோ மருத்துவமனைகள் (16.1 லட்சம் டோஸ்கள்); மேக்ஸ் ஹெல்த்கேர் (12.97 லட்சம் டோஸ்கள்); ரிலையன்ஸ் அறக்கட்டளையின் எச்.என் மருத்துவமனை (9.89 டோஸ்கள்); மெடிகா மருத்துவமனைகள் (6.26 லட்சம் டோஸ்கள்; ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (4.48 லட்சம் டோஸ்கள்); கோத்ரேஜ் (3.35 லட்சம் டோஸ்கள்); மணிப்பால் ஹெல்த் (3.24 லட்சம் டோஸ்கள்); நாராயண ஹிருதலயா (2.02 லட்சம் டோஸ்கள்), டெக்னோ இந்தியா டமா (2 லட்சம் டோஸ்கள்) கொள்முதல் செய்துள்ளன.