கோவர்த்தன பூஜை: பொதுமக்கள் முன்னிலையில்.. 8 முறை சாட்டையால் அடிக்கப்பட்ட சட்டீஸ்கர் முதல்வர்!
டெல்லி: கோவர்தன பூஜை சடங்கின் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் சாட்டையால் அடிக்கப்பட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக சுற்றி வருகிறது. மாநிலத்தின் செழிப்பு மற்றும் வளம் பெற வேண்டி, இதுபோன்ற வழிபாட்டை அவர் நடத்தினார்.
இந்த வீடியோவை ட்விட்டரில் பூபேஷ் பாகேல் பகிர்ந்துள்ளார். டிரம்ஸ் மற்றும் பிற வாத்தியங்கள் இசைக்கப்படுவது அதில் கேட்கிறது. அப்போது, ஒரு நடுத்தர வயது நபர், சத்தீஸ்கர் முதலமைச்சரை முழு பலத்துடன் சவுக்கால் அடிப்பது வீடியோவில் காட்சியாக தெரிகிறது.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூபேஷ் பாகேல் இதுபோன்ற ஒரு சடங்கில் பங்கேற்றபோது, இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் பூபேஷ் பாகல், அப்போது, பாரம்பரிய உடை மற்றும் பச்சை நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
|
அடித்தவர் அணைக்கிறார்
முதல்வர் பூபேஷ் பாகேல் கைகளை நீட்டி நிற்கிறார். அதன் பிறகு ஒரு நபர் அவரை சாட்டையால் அடிக்கத் தொடங்குகிறார். எட்டு சுற்றுகள் அடித்த பிறகு, சாட்டையால் அடித்த நபர், உணர்ச்சி பெருக்கோடு, பூபேஷ் பாகேலை அணைத்துக் கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது.
என்ன வரலாறு
கிருஷ்ண புராணத்தின்படி, கோகுலவாசிகள் தனக்கு பூஜை செய்யாத கோபத்தில், இந்திரன் பெருமழையை பெய்விக்கிறார். இடைவிடாத மழையால், மக்கள் அவதிப்படும்போது, கோவர்த்தன கிரியை கிருஷ்ணர் தனது சுண்டு விரலில் தூக்கி நிறுத்தி மக்களை காத்தார். கோவர்த்தன மலையை குடையாக கிருஷ்ணர் உயர்த்தி பிடித்த நாள் கோவர்த்தன பூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் நம்பிக்கை
கோவர்தன் பூஜையின் போது, ஒரு நபரை சாட்டையால் அடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதுபோன்ற வழிபாடு மக்களை அவர்களின் சிக்கல்களிலிருந்து விடுவிக்கவும், அதிர்ஷ்டத்தைத் தரவும் உதவும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் போல், ஜாஞ்சகிரி கிராமத்தில் கோவர்தன் பூஜையில் முதல்வர் பாகேல் பங்கேற்றார். மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக சாட்டையடி வலியை தாங்கிக் கொண்டார்.
பசுக்கள்
இந்த நிகழ்வில், பூபேஷ் பாகேல், கோவர்தன் பூஜையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார். பசுக்கள் வழிபடப்படுவது முக்கியம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். நமது மண்ணின் அடையாளத்தை பாதுகாப்பதும் அதனை முன்னெடுப்பதும் அனைவரினதும் கடமையாகும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
பாரம்பரியம்
இதுபோல சாட்டையால் அடிக்கும் நபர் ஒருவர் மட்டுமே. பரோசா தாக்கூர் என்பவர்தான் வழக்கமாக இதுபோல சாட்டையால் அடித்து வந்தார். வயதில் முதிர்ந்த பரோசா தாக்கூர் மரணமடைந்த நிலையில், அவரது மகன் பிரேந்திர தாகூர் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.