குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுக்க ஜூலை வரை கால அவகாசம்..நாடாளுமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கான விதிகளை வகுக்க ஜூலை 9ஆம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் அல்லாத இந்து, சீக்கியர்கள், சமணம், பௌத்தம், பார்சி, கிறிஸ்துவம் ஆகியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்வதே இந்த சட்ட மசோதாவின் நோக்கமாகும்.
இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் டிசம்பர் 12, 2019ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சட்டத்தின் கீழ் மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை வந்தவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான சட்டத்திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதை லோக்சபா எம்பி விகே ஸ்ரீகந்தன் கேள்வி எழுப்பியிருந்தார். சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுகள் ஆகின்றன.
நாளை ஏரோ இந்தியா விமான கண்காட்சி.. முதல் முறையாக பங்கேற்கும் அமெரிக்காவின் பி-1 லான்சர் விமானம்!
இதற்கான விதிமுறைகள் என்னென்ன என ஸ்ரீகந்தன் கேள்வி எழுப்பினார். இதற்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இதற்கான விதிமுறைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர்பான குழுக்கள் முறையே ஏப்ரல் 9 மற்றும் ஜூலை 9 வரை காலஅவகாசம் அளித்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.