ரூ.23,000 கோடி ஒதுக்கீடு- கொரோனாவை எதிர்கொள்ள விரிவான திட்டங்கள்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
டெல்லி: மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ள ரூ23,000 கோடி நிதியில் அடுத்த 6 மாதங்களில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான விரிவான கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் சர் தக்தசின்ஹிஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை காணொலி மூலம் திறந்து வைத்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: பாவ்நகர் மக்களுக்கு இந்த வசதி அர்ப்பணிக்கப்படுகிறது. இதுபோன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள், நெருக்கடி தருணத்தில் நாட்டிற்கு உதவிகரமாக இருக்கும்.

கொரோனா தொற்றிலிருந்து நம் நாட்டை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்துடன் கூடிய அணுகுமுறையின் வாயிலாக மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு பணியாற்றி வருகிறோம். குறுகிய காலத்தில் 4,000 மெட்ரிக் டன்னில் இருந்து 12,000 மெட்ரிக் டன்னாக ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஜன் விநியோகம், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டாவது அலையில் நாம் கற்றுள்ளோம். அவசரகாலத்தில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் வாங்குவதற்கு போதிய நிதி உதவியை தற்போது நாம் உறுதி செய்துள்ளோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், ரூ.23,000 கோடியை மத்திய அமைச்சரவை அண்மையில் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மூலம் அடுத்த 6 மாதங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் போதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு மன்சுக் மாண்டவியா பேசினார்.












Click it and Unblock the Notifications