இனி எல்லாமே அக்னி வீரர்கள்தான்.. நேரடி ஆட்சேர்ப்பு கிடையாது.. மத்திய அரசு மீது காங்கிரஸ் புகார்!
டெல்லி: இந்திய ராணுவத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நேரடி முறையில் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படாது என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தேசிய பாதுகாப்பு மீதான தாக்குதல் எனவும் காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது.
ராணுவத்தில் குறுகிய காலத்தில் கான்ட்ராக்ட் பாணியில் ஆட்கள் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தது.
இதன்படி 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் கிடைக்காது.

அக்னிபாத்
குறிப்பாக ஓய்வூதியம் கிடைக்காது. இத்திட்டத்தின் கீழ் பணிக்கு சேர்பவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்களின் அதிகபட்ச பணிக்காலம் 4 ஆண்டுகள்தான். ஆபிசர் பணிக்கும் கீழான பணிகளுக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு பணியாற்றும் வீரர்களில் 25% பேர் மட்டுமே நிரந்தர ராணுவ வீரர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் இப்பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இவர்கள் வெளியேறும் காலத்தில் ரூ.10-12 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு மேலெழுந்தது. 17.5 வயதில் உயர்கல்வியை நோக்கி செல்லும் காலகட்டம். இக்காலகட்டத்தில் இப்படியொரு திட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்தால் அவர்களது வாழ்க்கை வீணாகி விடும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இதனை விமர்சித்தனர்.

விசாரணை
அதேபோல உட்சபட்ச தியாகம் கோரும் பணிதான் ராணுவம். ஆனால் இங்கு பணியாற்றுபவர்களுக்கு ஓய்வூதியம் இல்லையென்றால் என்ன அர்த்தம்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன. ஆக இப்படியாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடங்கப்பட்டன. இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து நீதிபதிகள் சதீஷ் சந்திரா சர்மா மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்னர்(டிச.15) இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. விசாரணையில் இரு தரப்பின் கடைசி வாதங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

ட்வீட்
பின்னர் இது தொடர்பாக வரும் டிசம்பர் 23ம் தேதிக்குள் மத்திய அரசு எழுத்துப்பூர்வமான பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த பதிலை பொறுத்துதான் தீர்ப்பு அறிவிக்கப்படும். இந்நிலையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது கருத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த பதில்கள் மூலம் தேச பாதுகாப்பின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், "அக்னி வீரர்கள் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.

விமர்சனம்
மேலும், இந்திய ராணுவத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நேரடி முறையில் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படாது. இந்த காலி இடங்களை அக்னி வீரர்கள்தான் நிரப்புவார்கள் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தேச பாதுகாப்பின் மீதான தாக்குதல். ராணுவ வீரர்களின் மன உறுதி மீதான தாக்குதல்" என விமர்சித்துள்ளார். தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது வரை காங்கிரசின் நிலைப்பாடாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications