முட்டாள்தனம்.. காங்கிரஸ் கட்சி வளர வாய்ப்பே இல்லை.. ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்த குஷ்பு
டெல்லி: ‛‛காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் மேப் முட்டாள்த்தனமாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர்களே கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி எங்கும் மலராது. காங்கிரஸ் கட்சி வளர இனி வாய்ப்பே இல்லை. அந்த கட்சி அனைத்தையும் இழந்துவிட்டது. ஜனநாயக ரீதியாக ஆளும் கட்சிக்கு ஒரு எதிர்க்கட்சி வேண்டும். ஆனால் ராகுல்காந்தி இருக்கும் வரை எங்களுக்கு எதிர்க்கட்சி இருக்காது'' என நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கூறியுள்ளார்.
ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் சார்பில் ‛ அம்பேத்கரும் மோடியும்' என்ற தலைப்பில் சீர்த்திருத்தவாதிகள் சிந்தனையும், செயல்வீரர்களின் நடவடிக்கையும் என்ற பெயரில் புத்தகம் எழுதப்பட்டது.
இந்த புத்தகத்துக்கு இசையமைப்பாளரான இசைஞானி இளைராஜா முன்னுரை எழுதி இருந்தார். இந்த புத்தகத்தில் இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தார். இது கடும் சர்ச்சையானது.

புத்தகம் வெளியீட்டு விழா
இந்நிலையில் தான் ‛அம்பேத்கரும் மோடியும்' என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லி நேரு அருங்காட்சியகத்தில் மத்திய ஒலிபரப்புத்துறை சார்பில் இன்று நடந்தது. விழாவை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று ‛அம்பேத்கரும் மோடியும்' எனும் புத்தகத்தை வெளியிட்டார். இதில் இளையராஜா பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சர் அனுராக் திவாரி, மத்திய இணையமைச்சர் எல் முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

நடிகை குஷ்பு பேட்டி
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை குஷ்பு பேட்டியளித்தார். அப்போது ராகுல்காந்தியின் நடைப்பயணம் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி மலரும் என நம்பிக்கையாக கூறுகிறார்களே என நடிகை குஷ்புவிடம் கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு அவர், ‛‛எங்கெங்க ஆட்சி.எங்கெங்க மலரும். இன்று காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் கட்சியை விட்டு செல்கிறார்கள்.ராகுல் பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழகம், கேரளாவில் யாருடன் இருந்து பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி உள்ளார். நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என கூறுபவர்கள் உடன் இருந்து பேசி வருகிறார்.

முட்டாள்தனமாக உள்ளது
பாரத் ஜோடோ யாத்திரை யின் மேப் முட்டாள்த்தனமாக இருப்பதாக அவரது கட்சிக்காரர்களே சொல்கின்றனர். ராகுல்காந்தி தனது வசதிக்கு ஏற்ப யாத்திரை செய்வதாக கூறுகின்றனர். எங்கெல்லாம் தேர்தல் வரப்போகிறது என்பதை திட்டமிட்டு யாத்திரை நடைபெறவில்லை. ராகுல் காந்தியை பொறுத்தமட்டில் கட்சியின் தலைவர் பதவியை வகிக்கமாட்டேன். ஆனாலும் அனைவரும் அந்த மரியாதையை கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார்.

காங்கிரஸ் வளர வாய்ப்பே இல்லை
காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் ராகுல்காந்தியின் பெயரில் ‛காந்தி' என்ற பெயரை எடுத்துவிட்டால் 44 எம்பிக்களில் ஒரு எம்பியாக அதுவும் வயநாடு எனும் சின்ன இடத்தின் எம்பி மட்டும் தான். அமேதி தொகுதியில் தோற்ற ராகுல்காந்தி வயநாட்டை ஒரு கிராமம் என்று தான் நான் சொல்லுவேன். காங்கிரஸ் கட்சி வளர இனி வாய்ப்பே இல்லை. அந்த கட்சி அனைத்தையும் இழந்துவிட்டது. ஜனநாயக ரீதியாக ஆளும் கட்சிக்கு ஒரு எதிர்க்கட்சி வேண்டும். ஆனால் ராகுல்காந்தி இருக்கும் வரை எங்களுக்கு எதிர்க்கட்சி இருக்காது'' என்றார்.












Click it and Unblock the Notifications