அவங்க பிளானே வேற.. கொரோனா எல்லாம் கிடையாது! எங்களை பார்த்து பாஜகவுக்கு பயம்! காங்கிரஸ் நறுக்
டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி தனது யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாரத் ஜடோ யாத்திரையின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சல்மான் குர்ஷித், பாரத் ஜடோ யாத்திரை நிறுத்தப்படாது என்று அறிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா தொற்று உலகம் முழுவதும் தற்போது வரை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 66.7 லட்சம் பேரை இந்த தொற்று பலிவாங்கியுள்ளது.
மட்டுமல்லாது 65.5 கோடி பேர் இத்தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தொற்று பாதிப்பை தடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுடன் வாழ பழக வேண்டும் என்று கூறி கட்டுப்பாடுகளை தளர்த்தின.

பி.எஃப்-7
விளைவு உயிரிழப்புகள் கடுமையாக அதிகரித்தன. என்னதான் சீனாவில் கொரோனா தொற்று உருவாகி இருந்தாலும், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்டிருந்தாலும் அந்நாட்டில் தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை வெறும் 5 ஆயிரத்து சொச்சம்தான். ஆனால் அமெரிக்காவில் ஏறத்தாழ 11 லட்சம். இந்தியாவில் 5.30 லட்சம். ஆனால் தடுப்பூசி வந்த பின்னர் தொற்று பாதிப்பு பெரிதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உயிரிழப்புகள் ஒரேயடியாக குறைய தொடங்கியது. எல்லாம் சீராக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்க புதியதாக பி.எஃப்-7 என்கிற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் திடீரென தற்போது சீனாவில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. சீனா மட்டுமல்லாது ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இந்த தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவிலும் 4 பேரிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து ராகுல் காந்தி நடத்தி வரும் 'பாரத் ஜடோ யாத்திரையில்' கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் பொதுநலன் கருதி யாத்திரையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கடிதம்
பாஜகவுக்கு எதிராகவும் எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி 'பாரத் ஜடோ யாத்திரையை' கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். இந்த யாத்திரை நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,570 கி.மீ தூரம் பயணித்து இறுதியாக ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஒவ்வொரு நாளும் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் யாத்திரை ராஜஸ்தான் மாநிலத்தில் 100வது நாளை எட்டியது. இந்த பின்னணியில் மன்சுக் மாண்டவியாவின் கடிதம் வந்துள்ளது.

பிரதமர் பின்பற்றினாரா?
இந்த கடிதத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தியின் பலத்தை கண்டு பாஜக பயந்துவிட்டது என்றும், சமீபத்தில் பிரதமர் மோடி திரிபுராவில் நடத்திய யாத்திரையில் மட்டும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ன? எனவும் அசோக் கெலாட் கேள்வியெழுப்பி இருந்தார். தற்போது இவரைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாரத் ஜடோ யாத்திரையின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சல்மான் குர்ஷித், "பாரத் ஜடோ யாத்திரை கொரோனா விதிமுறைகளை பின்பற்றும். ஆனால் ஒருபோது இதனை நிறுத்தாது" என்று கூறியுள்ளார்.

பயம்
மேலும், "இந்நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்தை கூற உரிமை இருக்கிறது. இந்த யாத்திரையை கண்டு மத்திய அரசு பயப்படுகிறது. அதனால் நாள்தோறும் ஏதேனும் ஒரு உத்தரவுகளை இந்த அரசு பிறப்பித்துக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். தற்போது யாத்திரை ராஜஸ்தானிலிருந்து ஹரியானாவுக்கு முன்னேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications