சீனா டூ மோர்பி.. குளிர்கால கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் வியூகம்! எதிர்கட்சி தலைவர்களை சந்திக்க பிளான்!
டெல்லி: வரும் 7ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சீனாவுடனான எல்லைப் பிரச்னை, பணவீக்கம் என முக்கிய பிரச்னைகளை மத்திய அரசுக்கு எதிராக எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு சீனா தன்னுடைய கட்டுமானங்களை விரிவுபடுத்தி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து பாஜக எந்த விவாதங்களையும் மேற்கொள்ளவில்லை. எனவே இதனை பிரதான பிரச்சனையாக குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
'பயமா? மன்னிப்பு கேளுங்க..' சீனா ஆக்கிரமிப்பு குறித்து பிரதமருக்கு சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ்
பிரச்னை
வரும் 7ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. 17 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த குறுகிய அமர்வில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் தகவல் தொடர்புத் துறை தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது, "மோர்பி பாலம் அறுந்து விழுந்தது, எய்ம்ஸ் மருத்துவமனை சைபர் தாக்குதல், சட்டத்துறை அமைச்சரின் சர்ச்சை கருத்து என 14-15 பிரச்னைகளை கட்சி எழுப்ப இருக்கிறது.
ஒருங்கிணைப்பு
இதில் பிரதானமாக சீனா ஆக்கிரமிப்பு, பணவீக்கம், நீதித்துறை தன்னாட்சி என மூன்று பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி எழுப்ப இருக்கிறது. இது தொடர்பாக இதர எதிர்க்கட்சி தலைவர்களை எங்கள் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவில் சந்தித்துப் பேசி ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவார். கடந்த 22 மாதங்களாக இந்திய எல்லையில் சீனாவின் தலையீடு அதிகரித்திருக்கிறது. இதுதான் முதல் பெரிய பிரச்சனை. எனவே இதனை மையப்படுத்தியே எங்கள் வாதங்கள் தொடரும்" என்று கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்பு
கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலையடுத்து இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் நீடித்து வருகிறது. இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், காஷ்மீரின் லடாக் பகுதியில் டெப்சாங் எனும் இடத்தில் சீனா ஆக்கிரமிப்புகளை கட்டியுள்ளது குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது என்றும் இந்திய எல்லைக்குள் 15-18 கி.மீ தொலைவில் சீனா அமைத்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மத்திய அரசு என்ன முயற்சி எடுத்திருக்கிறது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
காரணம்
மேலும், "இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏன் அறிக்கை ஏதும் விடவில்லை? என கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த காலகட்டங்களில் இதே போன்று ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன, இது குறித்து சீனாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் எங்களுக்கு சொந்தமானது என சீனா கூறி வருவதாக முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் கூறியிருந்தார். அதாவது "இந்த ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனா, 1959 நிலைப்பாட்டிலேயே கறாராக நிற்கிறது. கால்வான் பள்ளத்தாக்கு வரை உள்ள இடங்கள் சீனாவுக்கு சொந்தமானது என்பதுதான் அந்த நிலைப்பாடு. ஆனால் இந்தியா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுதான் தற்போதைய பிரச்னைக்கு முழு காரணமாகும்" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.