அச்சம்.. வேதனை.. நம்பிக்கை.. இந்தியாவில் லாக்டவுன் அறிவித்து இன்றோடு ஒருவருடம்.. விடாத கொரோனா!
டெல்லி: இந்தியாவை மொத்தமாக புரட்டிப்போட்ட கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இன்றோடு ஒருவருடம் ஆகிறது.
ஜனவரி மாதம் 27ம் தேதி கேரளாவில் முதல் கொரோனா கேஸ் பதிவானது. பின் ஹரியானா, டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களுக்கு கொரோனா கேஸ்கள் பரவ தொடங்கியது.
நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து இந்தியாவில் முதலில் ஜனதா ஊரடங்கு ஒருநாள் ஊரடங்கு மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி மார்ச் 25ம் தேதி இந்தியாவில் முழு ஊரடங்கை அறிவித்தார்.
கேஸ்கள்
முதலில் ஒன்றிரண்டு கேஸ்கள் மட்டுமே வந்த நிலையில் வடமாநிலங்களில் திடீரென கொரோனா கேஸ்கள் வேகம் எடுக்க தொடங்கியது. பின் தமிழகத்திலும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து ஒரேயடியாக இந்தியா முழுக்க பிரதமர் மோடி கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி லாக்டவுன் அறிவித்தார். அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு லாக்டவுன் போடப்பட்டது.
தொடர்ந்து
முதலில் 21 நாட்கள் மட்டுமே லாக்டவுன் போடப்பட்டது. அதன்பின் வரிசையாக ஒவ்வொரு மாதமும் லாக்டவுன் நீடிக்கப்பட்டு.. முழுமையான லாக்டவுன் ஜூன் 8 வரை நீட்டிக்கப்பட்டது. ஜூன் 8க்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டவுன் தளர்வுகள் அன்லாக் 1, 2, 3 என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. லாக்டவுன் காலத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்தது.
ஜிடிபி
ஜிடிபி சரிவு, சுற்றுலாத்துறை, ஐடி துறை சரி, விளம்பரத்துறை சரிவு என்று மிக மோசமான நிலை ஏற்பட்டது. அதோடு லாக்டவுன் இருந்த போதிலும் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்தது. லாக்டவுன் அறிவித்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் இன்னும் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. தற்போதும் இந்தியாவில் நாளுக்கு நாள் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.
நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் 53415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,229,591 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 249 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,787,013 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160,726 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
தமிழகத்தில் இ பாஸ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் தொடங்கி ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடு தற்போது அமலில் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் தொடங்கி வாழ்க்கை முறை வரை அனைத்தும் கொரோனா லாக்டவுனுக்கு பின் லாக்டவுனுக்கு முன் என்று பிரித்துவிடலாம். இதனால் பலர் வேலையை இழந்தனர், வாழ்வாதாரத்தை இழந்தனர்.
பலர் முன்னேற்றம்
இதே சூழ்நிலையை பயன்படுத்தி பலர் வாழ்க்கையில் முன்னேற்றமும் அடைந்தனர். மொத்தமாக லாக்டவுன் பலரின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது. ஆனால் லாக்டவுன் முடிந்தும் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இன்னும் கொரோனா பாதிப்பும் குறையவில்லை..
சூழ்நிலை
கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறி இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மீண்டும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. இன்னொரு லாக்டவுன் வராமல் இருக்க மீண்டும் கட்டாயமாக மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்!