இந்த ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி.. மத்திய அரசின் அறிவிப்பு சாத்தியமா அல்லது வெற்று அறிவிப்பா?
டெல்லி: ஒரு பேட்ஜ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய நான்கு மாதங்கள் வரை ஆகும் என பாரத் பயோடெக் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு கூறியதைப் போல நாட்டில் அனைவருக்கும் இந்த ஆண்டிற்குள் தடுப்பூசி செலுத்த முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 120 கோடி மக்களுக்குத் தடுப்பூசிகளை செலுத்திவிட முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கும்பமேளாவில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடினர் - கணக்கை குறைத்து காட்டும் உத்தரகாண்ட் அரசு
ஆனால், இது சாத்தியம் தானா என்று பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் தடுப்பூசி உற்பத்தி என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும்.
பாரத் பயோடெக்
தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் மாதம் உற்பத்தி தொடங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி பேட்ஜ்கள், நான்கு மாதங்கள் கழித்து, அதாவது ஜூன் மாதம் தான் டெலிவரி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளது. தற்போது வரை 2 முதல் 2.5 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.
மத்திய அரசு
முன்னதாக, நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறுகையில், இந்தாண்டு இறுதிக்குள் கோவாக்சின் & கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மட்டும் 50 முதல் 55 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். இதுபோக வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டிலுள்ள அனைவருக்கும் எளிதில் தடுப்பூசிகளைச் செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
உற்பத்தித் திறன்
பாரத் பயோடெக் நிறுவனம் வரும் ஜூலை மாதம் முதல் கூடுதலாக 6-7 கோடி தடுப்பூசிகளும், செப்டம்பர் முதல் கூடுதலாக 10 கோடி தடுப்பூசிகளும் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனாலும், தடுப்பூசி உற்பத்தி தொடங்கி அது டெலிவரியாக 4 மாதங்கள் வரை ஆகும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் முதல் உற்பத்தி தொடங்கும் தடுப்பூசிகளை இந்தாண்டு நம்மால் பயன்படுத்த முடியாது.
30% தான்
மத்திய அரசு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் தற்போது 7.5 கோடி கோவாக்சின் டோஸ்களுக்கு ஆர்டர் அளித்துள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் தடுப்பூசி உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டாலும், இந்தாண்டு மொத்தம் 15.5 கோடி தடுப்பூசி டோஸ்களே பாரத் பயோடெக் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும். இது மத்திய அரசு கூறிய 50 கோடி தடுப்பூசிகளில் வெறும் 30% தான்.
உடனடியாக அதிகரிக்க முடியாது
தடுப்பூசி உற்பத்தியை ஒரே நாளில் அதிகப்படுத்த முடியாது. அதைப் படிப்படியாகவே அதிகப்படுத்த முடியும். ஒவ்வொரு நிலையிலும் மத்திய தேவையான ஒப்புதல்களைப் பெற வேண்டும். அதே போல நாட்டில் உற்பத்தி செய்யும் அனைத்து தடுப்பூசிகளும் மத்திய அரசின் பரிசோதனை நிலையத்தில் சோதனை செய்யப்பட வேண்டும். இதுபோக தடுப்பூசியை விநியோகம் செய்வதே ஒரு சிக்கலான ஒரு செயல்முறையாகும். இதற்கு அதிகப்படியான ஊழியர்கள் தேவைப்படும்.
சாத்தியம் உள்ளது
இந்த காரணங்கள் காரணமாகவே தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க முடியாது. இதனால் மத்திய அரசு கூறியதைப் போல ஓர் ஆண்டிற்குள் தடுப்பூசி செலுத்துவது என்பது கிட்டதட்ட நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இந்த 2 நிறுவனங்களும் தடுப்பூசி உற்பத்தி செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் என்பதால் குறுகிய காலத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவும் இவர்களால் முடியும் என்று மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.