'கோவாக்சின் விலை வாட்டர் பாட்டிலைவிட குறைவாக இருக்கும்..' பழைய வீடியோ வைரல்.. திடீர் விலை உயர்வு ஏன்
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ 1410ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனர் கிருஷ்ணா எல்லா, கோவாக்சின் விலை வாட்டர் பாட்டிலை விடக் குறைவாக இருக்கும் என்று கூறும் பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.
இலவச வேக்சின்.. ரொம்ப லேட்.. 1 வருஷத்துக்கு முன்பே செஞ்சிருக்கணும்.. மத்திய அரசுக்கு கடும் விமர்சனம்
அதேபோல உயிரிழப்புகளும் நான்காயிரத்தைக் கடந்தது. குறிப்பாகக் கடந்த மே மாதத்தில் தான் கொரோனா பாதிப்பும் சரி, உயிரிழப்பும் சரி மிக மோசமான ஒரு நிலையில் இருந்தது.
குறையும் கொரோனா
தற்போது தான் கொரோனா பரவலின் தாக்கம் மெல்லக் குறைந்து வருகிறது. சுமார் 63 நாட்களுக்குப் பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன் தான் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழாக வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 92,596 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 2,219 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் தற்போது கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 5% கீழாகக் குறைந்துள்ளது.
தடுப்பூசி பணிகள்
நாட்டில் மீண்டும் கொரோனா 3ஆம் அலை ஏற்படுவதைத் தடுக்க விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசின் பழைய தடுப்பூசி கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% தடுப்பூசிகளை மத்திய அரசே வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும். மீதமிருக்கும் 25% தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தடுப்பூசி விலை
தனியார் மருத்துவமனைகள் ரூ 150க்கு மேல் சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசி என்ன விலைக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஒரு டோஸ் 1,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்டர் பாட்டிலை விடக் குறைவு
கோவாக்சின் தடுப்பூசியின் விலை மிக அதிகமாக உள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகின்றர். இந்நிலையில், காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிவாஸ் தனது ட்விட்டரில் பாரத் பயோடெக் நிறுவனர் கிருஷ்ணா எல்லா, கோவாக்சின் தடுப்பூசியின் விலை குறித்துப் பேசும் பழைய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தடுப்பூசி விலை அனைவருக்கும் ஏற்ற வகையில் இருக்கும் எனக் குறிப்பிடும் கிருஷ்ணா எல்லா, கோவாக்சின் வாட்டர் பாட்டிலின் விலையைவிடக் கண்டிப்பாகக் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கிறார்.
அதிகம் ஏன்
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த ஆண்டு வாட்டர் பாட்டிலை விடக் குறைவாகத் தடுப்பூசியின் விலை இருக்கும் எனக் கிருஷ்ணா எல்லா கூறும் நிலையில், தற்போது ஒரு ஆண்டு கழித்து தடுப்பூசி விலை ரூ 1410ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எதற்காகத் தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டது, யாருக்குப் பங்கு கொடுக்க தடுப்பூசி விலை உயர்த்தப்பட்டது எனப் பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.