கொரோனாவை கட்டுப்படுத்த அதி தீவிரம்... நாடு முழுவதும் 73,600 தடுப்பூசி மையங்கள்-12.69 கோடி தடுப்பூசி
டெல்லி: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த திங்கட்கிழமையன்று நாடு முழுவதும் 73600 தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது அதிகபட்ச அளவாகும். இதுவரை சராசரியாக 45000 மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தினசரியும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்குப் போடப்பட்டது. பிப்ரவரி 2ஆம் தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல், மார்ச் 1ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் அழைப்பு விடுத்திருந்ததால், நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பணியிடங்களில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. வழக்கமாக ஒவ்வொரு நாளும், சராசரியாக 45,000 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன.
தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 63,800 தடுப்பூசி மையங்களும், இரண்டாம் நாளில் 71,000 மையங்களும், மூன்றாம் நாளில் 67,893 மையங்களும், நான்காம் நாளில் 69,974 மையங்களும் செயல்பட்டன.
தடுப்பூசி திருவிழாவின் நான்கு நாட்களில், தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்தது. முதல் நாளான ஏப்ரல் 11ம் தேதி 29,33,418 தடுப்பூசிகள் போடப்பட்டன. மறுநாள் 40,04,521 தடுப்பூசிகளும், ஏப்ரல் 13ம் மற்றும் 14ம் தேதிகளில் முறையே 26,46,528 மற்றும் 33,13,848 தடுப்பூசிகளும் போடப்பட்டன. தடுப்பூசி திருவிழாவில் நாடு முழுவதும் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,28,98,314 என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று நாடு முழுவதும் 73,600 மையங்கள் செயல்பட்டுள்ளன. இது அதிகபட்ச அளவாகும். மொத்தம் 31,03,474 தடுப்பூசி மருந்துகள் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டன இதில் 21,67,374 பயனாளிகளுக்கு முதல் டோஸுக்கு தடுப்பூசி மற்றும் இரண்டாவது டோஸுக்கு 9,36,100 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இதுவரைக்கும் 12,69,56,032 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வரும் மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



Click it and Unblock the Notifications
































