கோவாக்சின் தடுப்பு மருந்து...டெல்லி எய்ம்ஸில் மனித பரிசோதனை துவங்கியது!!
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கோவாக்சின் தடுப்பு ஊசி மனித பரிசோதனை துவங்கியது. 30 வயது இளைஞருக்கு இன்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் பரிசோதனை துவங்கிவிட்டது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ''கோவாக்சின் தடுப்பு ஊசி போடப்பட்ட பின்னர் அந்த நபர் மருத்துவமனையில் வைக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு மணி நேரம் கண்காணிக்கப்படுவார். பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து ஏழு நாட்களுக்கு கண்காணிக்கப்படுவார். இந்த ஆய்வுக்கு பலர் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்'' என்றனர்.
டெல்லி எய்ம்ஸ், ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக், புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கோவாக்சின் மருந்தை கண்டுபிடித்துள்ளது. முதல் கட்ட பரிசோதனையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 பேருக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
புது உச்சம்.. தமிழகத்தில் தீயாக பரவும் கொரோனா.. 6785 பேர் பாதிப்பு.. 21வது நாளாக அசத்தும் சென்னை
வயது வரம்பு:
கோவாக்சின் தடுப்பு மருந்து ஏற்கனவே பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இரண்டு கட்டங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட பரிசோதனைக்கு 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அதுவும் வேறு எந்த நோய் உபாதைகளும், கொரோனா தொற்றும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் கட்ட பரிசோதனைக்கு 375 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களில் 40 முதல் 50 பேர் தமிழகத்தில் சென்னையில் இருக்கும் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இன்று இந்த மருத்துவமனையில் பரிசோதனை துவங்கியுள்ளது.
குறைவான நபர்கள்:
முதல் கட்டமாக 0.5 மிலி கோவாக்சின் மருந்து தன்னார்வலர்களுக்கு செலுத்தப்படும். குறைவான எண்ணிக்கையில் நபர்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். பாதுகாப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். கையின் மேல்புறத்தில் நார்மலாக செலுத்தப்படும் ஊசி மருந்து போன்றே செலுத்தப்படும். இவர்கள் தினமும் அவர்களது அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். மக்களுடன் மக்களாக கலந்து பணியாற்றலாம், செல்லலாம்.
28 நாட்கள் கண்காணிப்பு:
இரண்டாம் கட்ட சோதனைக்கு 750 பேர் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இந்த ஆய்வுக்கு 12 முதல் 65 வயதுக்குள் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார்கள். தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்படும். அதில் எவ்வாறு அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என்று பார்க்கப்படும். இதுபோல் மொத்தம் 50 பேரின் பரிசோதனை மாதிரிகள் கிடைத்த பின்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் முடிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
Recommended Video
முந்திக்கொண்ட ஆக்ஸ்போர்டு:
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சோதனையில் இந்தியா பின் தங்கி உள்ளது. ஆனால், நாமும் உலக அரங்கில் இருக்கிறோம் என்ற பெருமையும் சேர்ந்துள்ளது. தற்போது ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து ChAdOx1-S என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. புனேயில் இருக்கும் செரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்துள்ளது. இந்தியாவில் ரூ. 1000 என்ற விலையில் இந்த தடுப்பு மருந்தைக் கொடுக்க செரம் முன்வந்துள்ளது.
மடெர்னா மூன்றாம் கட்டத்தில் உள்ளது. mRNA என்ற பெயரில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. இவை தவிர உலக அளவில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனையில் ஆறு மருந்து நிறுவனங்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.