குட் நியூஸ்... 60 வயதைக் கடந்தவர்களுக்கு.. மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி
டெல்லி: 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் என மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

60 வயதை கடந்தவர்களுக்கு
இந்நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள், மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல 45 வயதைக் கடந்தவர்களில் ஏதேனும் உடல்நிலை பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Array
நாடு முழுவதும் உள்ள 10,00 அரசு மையங்களிலும் 20,000 தனியார் மையங்களிலும் இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு மையங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறிய அவர், தனியார் மையங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கட்டண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பிரதமர் மோடி
இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், பல மாநில முதல் அமைச்சர்களும் 50 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களுக்கும் அடுத்த மாதம் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் துறைக்கு அனுமதி
அதேபோல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார மையங்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் துறையை அனுமதித்தால் குறைவான நேரத்தில் அதிக பேருக்கு தடுப்பூசிகளைச் செலுத்த முடியும் என தெரிவித்திருந்தனர். விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தனியார் துறையை அனுமதித்தால் 60 நாட்களில் 50 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க முடியும் என்று கூறியிருந்தார்.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என டாக்டர் ரெட்டி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. சுமார் 91% பலன் அளிப்பதாலும் உற்பத்தி செய்யும் செலவும் குறைவு என்பதாலும் விரைவில் இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி-க்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications