ஆபரேஷன் ஆக்டோபஸ்! அம்பலமானது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புகள்- நெருக்கடியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா!
டெல்லி: இஸ்லாமியர்கள் அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India-PFI)-வின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு 106 பேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்கு ஆபரேஷன் ஆக்டோபஸ் என மத்திய அரசு பெயரிட்டிருந்ததாம். இந்த சோதனைகளின் போது பிஎப்ஐ அமைப்பின் மூத்த தலைவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதும் அம்பலமாகிவிட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் கடந்த 22-ந் தேதியன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள், அறக்கட்டளைகள், அவை நடத்தும் மதப் பள்ளிகளான மதராசாக்கள் என அத்தனையும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

200 இடங்களில் ரெய்டு
நாடு முழுவதும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இச்சோதனைகளில் ரொக்கப் பணம், ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனைகளுக்கு எதிராக பல இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களையும் நடத்தினர்.

106 பேர் கைது
இந்த சோதனைகளின் முடிவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர்கள் உள்ளிட்ட 106 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி பார்வையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதற்காக தனியாக 6 கண்ட்ரோல் ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக இந்த நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் ஆக்டோபஸ் என பெயரிட்டிருந்தது மத்திய அரசு.

ஆபரேஷன் ஆக்டோபஸ்
ஆபரேஷன் ஆக்டோபஸ் என்ற பெயரில் மத்திய அரசு நடத்திய இந்த அதிரடி சோதனைகளில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்குமான தொடர்புக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சிலர் தனியாக ஒரு பயங்கரவாத இயக்கத்தை உருவாக்க நிதி ஒதுக்கி பயிற்சிகள் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

விரைவில் தடை?
மேலும் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பீகார் பயணம் மேற்கொண்ட போது அதை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டியது; இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியது ஆகியவையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளனவாம். இதன் உச்சமாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் சில தலைவர்கள் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதையடுத்து இந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனராம். இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு விரைவில் தடை செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications