சீட் பெல்ட் அணியாததால் தப்பிய ரிஷப் பண்ட்.. முதுகு, தலையில் பலத்த காயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக முதுகு மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷப் பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய தேவை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பண்ட், விரைந்து குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஜாம்பவான் வீரர் தோனிக்கு பின், அவரது இடத்தை எவ்வித சிரமமின்றி ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு வந்தார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் ஆட்டம் சர்வதேச ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தது.
அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் இந்திய அணி திணறிய போது, அதிரடியாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.

உத்தரகாண்ட் சென்ற பண்ட்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் சில நாட்களுக்கு பின் நாடு திரும்பினர். இதனால் நீண்ட வாரங்களுக்கு பின் வீடு திரும்பிய ரிஷப் பண்ட், சொந்த வேலைகளையும் முடிக்க திட்டமிட்டு, உத்தரகாண்ட் மாநிலம் பயணித்துள்ளார்.

டிவைடரில் மோதி விபத்து
அங்கு தனது பணிகளை முடித்துவிட்டு மீண்டும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மங்களார் - நார்சன் இடையே வந்துகொண்டிருந்த போது காலை 5.30 மணியளவில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரில் மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் சிக்கியதில், திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட், காரில் இருந்து வேகமாக குதித்துள்ளார்.

சீட் பெல்ட் அணியாததால் தப்பித்த பண்ட்
இதனிடையே காரின் சீட் பெல்ட்டை ரிஷப் பண்ட் அணியாததால், உயிர் பிழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காரின் சீட் பெல்ட்டை அணிந்திருந்தால், காரில் தீப்பிடித்த போது தப்பியிருக்க முடியாது என்று கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்த போது, காரில் இருந்து சாலையில் குதித்துள்ளார். இதில் ரிஷப் பண்டிற்கு முதுகு, தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரி?
இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பண்ட், முதலுதவி சிகிச்சைக்கு பின் டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் வேண்டுகோள்
விபத்தில் சிக்கிய கார் மற்றும் ரிஷப் பண்ட் சிகிச்சை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ரிஷப் பண்டிற்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரிஷப் பண்ட் வேகமாக குணமடைய வேண்டும் என்றும், அவரின் நிலைமை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications