இந்தியா-சீனா எல்லை விவகாரம்- ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட கூடாது- பாதுகாப்பு அமைச்சகம் அட்வைஸ்
டெல்லி: இந்தியா- சீனா எல்லை விவகாரங்களில் ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Recommended Video
சிக்கிம், லடாக் எல்லை பகுதிகளில் சீனா தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. 2017-ம் ஆண்டு பூட்டானின் டோக்லாமை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது.
இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் சுமூக நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய வீரர்களுடன் சீனா வீரர்கள் கை கலப்பில் ஈடுபட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
ராணுவம் குவிப்பு
டோக்லாம் பிரச்சனைக்குப் பிறகு இந்தியா-சீனா எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் உருவானது. இருநாடுகளும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை எல்லைகளில் குவித்தன. இதனால் இந்தியா-சீனா யுத்தம் மூளுமோ என்கிற அச்சமும் எழுந்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றது. இதனையடுத்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியா- சீனா பேச்சுவார்த்தை
சீனாவின் எல்லைக்குட்பட்ட மால்டோ பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 5 மணிநேரத்துக்கும் அதிகமாக இருநாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய ராணுவ அதிகாரிகள் குழுவுக்கு லெப்.ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை வகித்திருந்தார். இப்பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், ஏப்ரல் இறுதியில் எல்லைகளில் என்ன நிலைமை இருந்ததோ அதை இருதரப்பும் கடைபிடிக்க வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கை.
ஏற்க முடியாத சீனா கோரிக்கை
ஆனால் சீனாவோ, எல்லையில் இந்தியா மேற்கொண்டு வரும் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது. இதனை இந்திய அதிகாரிகள் ஏற்கவில்லை. இந்த பின்னணியில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அதிகாரிகள் குழு லே பகுதிக்கு திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்
அந்த அறிக்கையில், இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியா, சீனா அதிகாரிகள் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் உருவாக்கப்பட்ட வழிகள் மூலமாக, தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த நிலையில், இந்த ஈடுபாடுகள் குறித்து யூகமாகவோ, ஆதாரமற்றத் தகவல்களையோ வெளியிடுவது உதவிகரமாக இருக்காது. எனவே, ஊடகங்கள் இத்தகைய செய்திகளை வெளியிடுவதிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.