சிவந்த கண்கள்.. குங்குமம்.. பதட்டத்தோடு வந்த சிசோடியா.. துணை முதல்வரே நடுங்கிப் போன அந்த நொடி!
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவில் பின்னடைவில் இருந்து மீண்டும் முன்னிலை பெற்று கடைசி நேரத்தில் வெற்றி பெற்றார்.
Recommended Video
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவில் பின்னடைவில் இருந்து மீண்டும் முன்னிலை பெற்று கடைசி நேரத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றிபெறும் வரை, ஆம் ஆத்மி தொண்டர்கள் பெரும் பதற்றத்தோடு காத்து இருந்தார்.
ஆம் ஆத்மி டெல்லியில் மீண்டும் மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தி இருக்கிறது. ஐந்து வருடம் அந்த கட்சி கொடுத்த மிக சிறப்பான ஆட்சிக்கு பரிசாக தற்போது, ஆம் ஆத்மி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களில் முன்னிலை, பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
ஆனால் என்ன
ஆனால் இன்று காலையில் இருந்தே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கொஞ்சம் பதற்றமாகவே இருந்தார். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுவிடும் என்பது அவருக்கு தெரிந்ததே. டெல்லி தேர்தல் வெற்றியில் மணீஷ் சிசோடியா உறுதியாக இருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூட, மக்களுக்காக 5 ஆண்டுகாலம் பணி செய்திருக்கிறோம்; நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.
எப்படி இருந்தார்
ஆனால் மணீஷ் சிசோடியா பதட்டமாக இருக்க வேறு காரணம் இருந்தது. அதன்படி, மணீஷ் சிசோடியா அவர் போட்டியிட்ட பட்பர்கஞ்ச் தொகுதியில் தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது என்று வந்த செய்திகள்தான். ஆம் மணீஷ் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது. ஆட்சி நிர்வாகத்தில் அதிக அனுபவம் கொண்ட மணீஷ் சிசோடியா அக்கட்சியின் மிக முக்கியமான அமைச்சர். டெல்லியில் கல்வித்துறையை மொத்தமாக மாற்றியது ஜாம்பவான்தான் மணீஷ் சிசோடியா. ஆனால் இவருக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது.
மோசம் இல்லை
கட்சியில் இவர்தான் நம்பர் 2. நிர்வாக ரீதியாக நிறைய ஆலோசனை வழங்கும் மணீஷ் சிசோடியா. அரசியல் என்று வந்தால், கெஜ்ரிவால் சொன்னதை அப்படியே கேட்பார். இதனால் சட்டசபை தேர்தலின் போதும் கூட, மணீஷ் சிசோடியா சரியாக பிரச்சாரம் செய்யவில்லை. மணீஷ் சிசோடியா செய்த பிரச்சாரத்திற்கு கூட்டமும் கூடவில்லை. அதோடு அவருடைய தொகுதியில் அவர் செய்த பிரச்சாரத்திற்கும் பெரிய அளவில் கூட்டம் வரவில்லை.
தோல்வி அடையவே
மணீஷ் சிசோடியா அவரின் தொகுதியில் தோல்வி அடையவே வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. அங்கு பாஜகவின் வேட்பாளர் ரவீந்திர் சிங் நெஹி மிகவும் வலுவாக இருக்கிறார். அவரை வெல்வது கடினம் என்று கணிப்புகள் வெளியானது. இதுதான் மணீஷ் சிசோடியா பதற்றம் அடைய காரணம். அதோடு பிரசாந்த் கிஷோர் தரப்பும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் கூட, மணீஷ் சிசோடியா வெல்வதை உறுதியாக கூறவில்லை.
பக்தி
இதனால் காலையிலே மணீஷ் கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜை செய்து நெற்றியில் குங்குமத்தோடு வந்தார். ஆனால் இன்று காலையில் இருந்து மணீஷ் சிசோடியா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவிலேயே இருந்தார். காலை 9 மணி வரை ஒரு மணி நேரம் முன்னணியில் இருந்தார். ஆனால் போக போக மணீஷ் சிசோடியா பின்னடைவை சந்தித்தார். ஒரு கட்டத்தில் மணீஷ் சிசோடியா 2500 வாக்குகள் பின்னடைவை சந்தித்தார். இது அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதுவரை மணீஷ் சிசோடியா தன்னுடைய வீட்டில்தான் இருந்தார்.
எங்கே சென்றார்
இந்த பின்னடைவுக்கு பின் மணீஷ் சிசோடியா, வேகமாக வாக்கு எண்ணும் மையம் சென்றார். அங்கே அலுவலகத்தில் தனது கட்சி உறுப்பினர்கள் உடன் நகத்தை கடித்துக் கொண்டு இருந்தார். நேரம் செல்ல செல்ல, மணீஷ் சிசோடியா முகம் வியர்க்க தொடங்கியது. கண்கள் சிவக்க தொடங்கியது. அவரின் முகத்தில் தோல்விக்கான அடையலாம் வெளிப்படையாக தெரிய தொடங்கியது.
கிட்டத்தட்ட பதற்றம்
கிட்டத்தட்ட பதட்டத்தில் மணீஷ் சிசோடியா ஆடிப்போய்விட்டார். துணை முதல்வர் தோல்வி அடைந்தால் அது கட்சிக்கே பெரிய அவமானமாக இருக்கும். இதனால் மணீஷ் சிசோடியாவை பார்க்க கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் வர தொடங்கினார்கள். அதன்பின் 2 மணி வாக்கில்தான் மணீஷ் சிசோடியா கொஞ்சம் முன்னிலை பெற தொடங்கினார். வரிசையாக கொஞ்சம் கொஞ்சமாக வாக்குகளை பெற்று பின்னணியை குறைத்தார்.
முன்னிலை பெற்றார்
2.30 மணி அளவில் முன்னிலை பெற்றார். அதன்பின் போக போக அதிக வாக்குகள் முன்னிலை பெற்றார். பின் 3 மணிக்கு பிறகு 69,652 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் நெஹி 66,261 வாக்குகள் பெற்றார். 3391 வாக்குகள் மட்டுமே வித்தியாசம்! இந்த வெற்றிக்கு பின்தான் மணீஷ் சிசோடியா முகத்தில் சிரிப்பே வந்தது. தனது கையை கட்சியின் இன்னொரு மூத்த உறுப்பினர் முதுகில் சந்தோசமாக தட்டினார். முகம் முழுக்க சிரிப்போடு, மணீஷ் சிசோடியா சந்தோசமாக வாக்கு எண்ணும் அறையில் இருந்து வெளியே வந்தார்.