பயங்கரவாதிகளுக்கு தொடர்பு? டெல்லி கார் வெடிப்பில் பாய்ந்தது ‛உபா’ சட்டம்.. அப்படினா என்ன?
டெல்லி: டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கார் வெடிப்பு தொடர்பாக டெல்லி போலீசார் ‛உபா' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பயங்கரவாதிகளுக்கு தொடர்புள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த சட்டம் என்பது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இந்நிலையில் தான் நேற்று மாலையில் டெல்லியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது.

அதாவது டெல்லி செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே நேற்று மாலை 6.52 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. மெதுவாக சென்று கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதன் காரணமாக அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் வந்தவர்கள் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கார் வெடிப்பின் பின்னணி குறித்து அரசு, போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர், "நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை நடத்துவோம்." என்றார்.
பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம் என்று கருதப்படுவதால் அதுபற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் கார் வெடித்த இடத்தை சுற்றிய கண்காணிப்பு கேமராக்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கார் வெடிப்பு தொடர்பாக டெல்லி கோட்வாலி போலீசார் ‛உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உபா (Unlawful Activities (Prevention) Act) 16, 18 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்னும் பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நம் நாட்டை பொறுத்தவரை ‛உபா' சட்டம் என்பது ரொம்ப முக்கியமானது. இதனை தமிழில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் என்று சொல்வார்கள். நம் நாட்டின் பயஙகரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்டம் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
நம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒற்றுமை உள்ளிட்டவற்றை அச்சுறுத்தும் நபர்கள் மீது இந்த சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்டும். அதிகமாக பயங்கரவாதிகள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தான் டெல்லி கார் வெடிப்பில் பயங்கரவாதிகளுக்கு தொடர்புள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications