ஜாமியா பல்கலைக்கழக வன்முறை வழக்கு: ஷார்ஜில் இமாமை விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு
ஜாமியா பல்கலைக்கழக வன்முறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஷார்ஜில் இமாமை விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பான வழக்கில் இருந்து ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜில் இமாமை டெல்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு இயற்றியது.
குடியுரிமை சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக கூறி நாடு முழுவதும் அப்போது பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதேபோல், டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்திலும் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

ஷார்ஜில் இமாம் கைது
இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்ததாக ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜில் இமாமை டெல்லி போலீசார் கைது செய்தனர். அதேபோல், இந்த வழக்கில் மாணவர் நல ஆர்வலர் ஆசிப் இக்பால் தன்ஹா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரையும் விடுவித்த கோர்ட்
இருவருக்குமே இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கொடுக்கப்பட்ட போதிலும் 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறையை தூண்டிய வழக்கில் உபா சட்டத்தின் கீழ் ஷார்ஜில் இமாம் மீது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஷார்ஜில் இமாம் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் ஷார்ஜில் இமாம் மற்றும் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகிய இருவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இமாம் பேசிய வீடியோ
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும், அலிகார் பல்கலைக்கழகத்திலும், வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் எனக் ஷார்ஜில் இமாம் பேசிய வீடியோ பதிவு வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications