அமளிக்கு நடுவேயும் காரியத்தை சாதித்த மத்திய அரசு.. 2014க்கு பிறகு ராஜ்யசபாவில் அதிக சட்டங்கள் பாஸ்
டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரத்தால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் 2014ம் ஆண்டுக்கு பிறகு, அதிகபட்சமாக இந்த மழைக்கால கூட்டத் தொடரில்தான் அதிகப்படியான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம்.. அவ்வளவு வேக வேகமாக சட்ட மசோதாக்கள் பாஸ் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 19ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் துவங்கியது. ஆனால் இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து பெகாசஸ் என்ற உளவு சாப்ட்வேரை வாங்கி இந்திய எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் முந்தைய நாளில் செய்தி கட்டுரை வெளியானது. இந்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்ததால் தொடர்ந்து அவை அலுவல்கள் முடங்கின.

அலுவல் நேரம்
அமளி காரணமாக, ராஜ்யசபாவில் 74 மணி நேரம், 26 நிமிட அலுவல் நேரம் இழக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், 17 நாட்கள் நடந்த அவையில், ஒரு நாளைக்கு 1 சட்ட மசோதா என்ற வகையில் சட்டம் நிறைவேறியுள்ளது. 2020ம் ஆண்டு, நாடு முழுக்க கொரோனா முதல் அலை தாக்கியபோது, ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 சட்ட மசோதாக்கள் நிறைவேறியுள்ளன. 2014ம் ஆண்டுக்கு பிறகு இதுதான் அதிகப்படியான சராசரியாகும்.

அடுத்தடுத்து சட்டங்கள்
ராஜ்யசபா மழைக்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்பு திருத்தம் 127வது திருத்த மசோதா, தீர்ப்பாய சீர்திருத்த மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (திருத்தம்) மசோதா, உள்நாட்டு கப்பல் மசோதா உட்பட மொத்தம் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டங்கள் நிறைவேற்றம்
விவசாயச் சட்டங்கள், பெகாசஸ் ஸ்பைவேர், கோவிட் -19 மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து எதிர்க்கட்சிகள் கடுமையாக தர்ணா நடத்தியபோதிலும், இத்தனை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டுக்கு பிறகு அதிகப்படியாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது, அல்லது அதிக அலுவல் நேரங்களை இழந்தது இந்த கூட்டத் தொடரில்தான்.

உடைந்து பேசிய வெங்கையா நாயுடு
நேற்று ராஜ்யசபாவில் பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நடந்துகொண்ட விதம் குறித்து ஆதங்கத்தோடு உடைந்த குரலில் பேசினார். உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறிவிட்டதாகவும், சில உறுப்பினர்கள் மேஜை மீது அமர்ந்தும், சிலர் மேஜைகளில் ஏறியும் அமளியில் ஈடுபட்டதால், அவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டதாக கண்ணீர் மல்க வெங்கையா நாயுடு பேசினார். இப்படியான நிலைக்கு இடையேதான், இத்தனை சட்டங்கள் பாஸ் செய்யப்பட்டுள்ளன. அரசு அதன் விஷயத்தில் கவனமாகவே இருந்துள்ளது என்பதுதான் இந்த புள்ளி விவரம் சொல்லும் பாடம்.

குற்றச்சாட்டுகள்
இதனிடையே, எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் மோசமாக கையாளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜ்யசபாவின் காங்கிரஸ் உறுப்பினர் சாயா வர்மா, ஆண் மார்ஷல்கள் (அவை பாதுகாப்பு போலீசார்) எதிர்க்கட்சியின் பெண் உறுப்பினர்களை பிடித்து தள்ளியதாக குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications