'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா
டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியதைக் கடுமையாகக் கண்டித்துள்ள பாஜக, அவர் பாகிஸ்தான் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் வகையில் சட்டப்பிரிவு 370 இருந்தது. இதனை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இது தொடர்பான விவாதங்கள் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திக்விஜய் சிங் பேச்சு
இந்நிலையில், கிளப்ஹவுஸ் செயலியில் ஒரு உரையாடலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கலந்து கொண்டார். அந்த விவாதத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த திக்விஜய் சிங், "சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட மாநில அந்தஸ்தைக் குறைத்தது என்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் வருத்தமளிக்கும் முடிவு.
கஷாமீர் விவகாரம்
காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது நிச்சயம் இது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும்" என்றார். திக்விஜய் சிங்கின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலானது. இதனை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். திக்விஜய் சிங் பாகிஸ்தான் செய்தியாளர் கேட்ட கேள்விக்கே இப்படியொரு பதிலை அளித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.
பாகிஸ்தானுடன் ரகசிய ஒப்பந்தம்
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், "திக்விஜயா சிங் இந்தியா மீது எவ்வாறு விஷத்தைக் கக்குகிறார் என இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் பாகிஸ்தானுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். இவரே தான் கடந்த காலங்களில் புல்வாமா தாக்குதலை ஒரு விபத்து என்றும் மும்பை தாக்குதலை ஆர்.எஸ்.எஸ் சதி என்றும் குறிப்பிட்டவர் என்பதை நாம் மறந்திடக்கூடாது" என்றார்.
கடும் தாக்கு
மேலும், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதற்குச் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றும் அளவிற்குக் காங்கிரஸ் செல்லும் என்று அவர் குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் தனது பெயரை ஐஎன்சி (இந்திய தேசிய காங்கிரஸ்) என்பதில் இருந்து ஏஎன்சி, (தேசிய விரோத கிளப்ஹவுஸ்) என்று மாற்றிக் கொள்ளலாம் என்று விமர்சித்த சம்பித் பாத்ரா, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைச் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.