வருமான வரி விலக்கு! இந்தாண்டு பழையபடிதான் வரி! புது ரூல்ஸ் நடைமுறைக்கு வராது- ஏன் தெரியுமா? ட்விஸ்ட்
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இருந்தாலும் கூட வருமான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்போர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த புதிய அறிவிப்பு எப்போது அமலுக்கு வரும் என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்:
இந்நிலையில் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் சரியாக 11 மணிக்கு பட்ஜெட் உரையை அவர் வாசிக்கத் தொடங்கிய நிலையில், சுமார் 80 நிமிடங்கள் அந்த உரை நீடித்தது. அவரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. இதை ஆளும் தரப்பினர் பலரும் வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.
வரி விலக்கு:
நிர்மலா சீதாராமன் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும், வருமான வரி தொடர்பான அறிவிப்பே பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. அதன்படி வருமான வரியில் புதிய வரி முறையைத் தேர்வு செய்வோருக்கு ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என அவர் அறிவித்தார். இது நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிலும் குறிப்பாக சம்பளதாரர்கள், நிலையான விலக்குடன் ரூ.12.75 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.
எப்போது அமலுக்கு வரும்:
இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே பலரும் ஒரு சந்தேகம் எழுந்தது. அதாவது இந்தாண்டு நாம் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டி உள்ள சூழலில், அதில் இருந்தே இந்த வருமான வரி விலக்கு பொருந்துமா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்தாண்டு வருமான வரி செலுத்தும் போது ரூ.12 லட்சம் வரை விலக்கு கிடைக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், உண்மையில் இந்தாண்டு வருமான வரியில் இந்த விலக்கு நமக்குக் கிடைக்காது.
ஏனென்றால் இது 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும். எனவே, அடுத்த நிதியாண்டில் நாம் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இருந்தே இது அமலுக்கு வரும். நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் சூழலில், அதுவரை நாம் ஈட்டிய வருமானத்திற்கு வருமான வரி செலுத்தும் போது அதற்கு முந்தைய விதிகளே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அடுத்தாண்டு முதல் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்போருக்கு வருமான வரி செலுத்த வேண்டி இருக்காது.
புதிய வரி முறை:
புதிய விதிகளின்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்துக்குப் பூஜ்ய வரி விதிக்கப்படும்.. 4 முதல் 8 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம், 8-12 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம், 12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீதம், ரூ.16 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வருமான வரி விதிக்கப்படும். ரூ. 20-24 லட்சத்தில் 25 சதவீதமும், ரூ.24 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications