ஓடும் ரயிலை துரத்திச்சென்று டெலிவரி.. டன்சோ ஊழியருக்கு குவியும் பாராட்டு! தீயாக பரவும் வீடியோ!
டெல்லி: ஓடும் ரயிலை துரத்திச்சென்று டன்சோ டெலிவரி ஊழியர் ஒருவர் பார்சலை உரியவரிடம் ஒப்படைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த டன்சோ ஊழியருக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஹோட்டல்களில் உணவு தொடங்கி மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள், பேக்கேஜ்கள் என அனைத்தும் இப்போது வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு வசதி பெருகிவிட்டது.
ஸ்விக்கி, சோமோட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களுக்கு ஈடாக டன்சோ நிறுவனம் மளிகை பொருட்கள் தொடங்கி காய்கறி மற்றும் பேக்கேஜ்கள் என பல பொருட்களையும் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

டெலிவரி சேவை
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நிமிடம் சாலையை பார்த்தாலே, அதில் இத்தகைய டெலிவெரி சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் சிட்டாக பறந்து செல்வதை காணலாம். அந்த அளவுக்கு இன்றைய மாடர்ன் உலகில் இந்த தொழில் அபரிவிதமாக வளர்ந்துவிட்டது. மக்களுக்கு பல்வேறு சவுகரியங்களும் கிடைப்பதால் இத்தகைய செயலியை பயன்படுத்தி ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது.

ஓடி சென்று டெலிவரி
இப்படி டெலிவேரி சேவையில் ஈடுபட்டு இருக்கும் ஒரு ஊழியர், ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் புறப்பட்டு விட்ட போதிலும் ஓடிச்சென்று டெலிவரி செய்யும் ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. 7 செகண்டுகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டு செல்கிறது. பயணிகளை வழியனுப்பி வைத்துவிட்டு ஒரு சிலர் பிளாட்பார்மில் அங்கும் இங்கும் நடமாடிகொண்டு இருக்கின்றனர்.

பெண்ணிடம் ஒப்படைத்த ஊழியர்
அப்போது ஓடும் ரயிலின் வாசலில் நின்ற படி பெண் ஓருவர் யாரையோ பார்த்த்து சீக்கிரம் வாருங்கள் என்பது போல சைகை காட்டுகிறார். அப்போது டன்சோ டெலிவரி ஊழியர் ஒருவர் கையில் பொட்டலம் ஒன்றை வைத்தபடி வேகமாக ஓடி வருகிறார். ரயில் படிப்படியாக வேகத்தை அதிகரித்தப்படி சென்றாலும் விடாது ஓடிச்சென்ற அந்த டன்சோ டெலிவரி ஊழியர், படியில் பொட்டலத்தை வாங்க தயாராக நின்ற பெண்ணிடம் சரியாக ஒப்படைத்து விடுகிறார்.

நெட்டிசன்கள் பாராட்டு
இந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் காட்சிகளை நினைவு கூரும் வகையில் அமைந்துள்ள இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும், டன்சோ ஊழியரின் விடா முயற்சி மற்றும் தொழில் அர்ப்பணிப்பை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் ஆபத்தான முறையில் இப்படி டெலிவரி செய்வது அவசியம்தானா என கேள்வி எழுப்பாமலும் இல்லை.












Click it and Unblock the Notifications