இந்தியாவில் களை கட்டிய தேர்தல் திருவிழா… வேடிக்கை பார்க்க குவியும் வெளிநாட்டினர்
டெல்லி: மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடக்கும் தேர்தல் திருவிழாவைக் காண வெளிநாட்டினர் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டில் காணும் இடமெல்லாம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது. இதனால், மலைப் பிரதேசங்கள், உலக அதிசயங்கள், கலாச்சாரங்கள் என தங்களது கவனத்தை செலுத்தி வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை திருப்பி உள்ளது தனியார் நிறுவனங்களின் தேர்தல் சுற்றுலா திட்டம்.
தமிழகம் - புதுச்சேரியில் 1,500 வேட்புமனுக்கள் தாக்கல்... இன்று பரிசீலனை
தேர்தல் திருவிழா
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விதவிதமாகவும், வித்தியாசமாகவும் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனை காண்பதற்காக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
2 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அறிவதோடு தேர்தலை காண்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர் .
ஏராளமானோர் விண்ணப்பம்
தேர்தல் திருவிழாவை காண்பதற்காக இதுவரை 3, 500 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். நாட்டிலேயே குஜராத்தில் கடந்த 2012ம் ஆண்டு இந்த சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரச்சாரம் களைகட்டுகிறது
ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்குப்பதிவு எவ்வாறு நடைபெறுகிறது. பிரச்சாரம் எவ்வாறு களைகட்டுகிறது. யாருக்கு, யாருக்கும் இடையே கடும் போட்டி என்பனவற்றை நேரடியாக சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் வாய்ப்பினை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உருவாக்கி தந்துள்ளனர்.
உள்நாட்டினரும் பார்க்கலாம்
வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்நாட்டினரும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் களைகட்டுகிறது. வாக்கு சேகரிப்பு பிரச்சாரம், நட்சத்திர வேட்பாளர்கள் குறித்து அறிவதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அலைகடலெனத் திரளும் கூட்டம்
தென் மாநிலங்களில் நடக்கும் தேர்தலில், திருவிழாவைப் போல் கரகாட்டம் முதல் ஆடல், பாடல் என அனைவரின் முகத்திலும் சிரிப்பையும், உற்சாகத்தையும் காண முடிகிறது. பிரச்சாரத்தின் போது கூட்டத்தை கூட்டுவதற்கும், தங்களின் கட்சியின் வலிமையைக் காட்டுவதற்காகவும் பணம் கொடுத்து அலைகடலெனத் திரளும் கூட்டத்தை காண தேர்தல் சுற்றுலா பிரபலமாகிவருகிறது.
முக்கிய வேட்பாளர்கள்
மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முக்கிய வேட்பாளர்களின் செல்வாக்கு குறித்து தெரிந்து கொள்வதற்கும் வெளிநாட்டிலிருந்து மாணவர்களும் அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
கூடுதல் மகிழ்ச்சி
இந்தியாவிற்கு மற்ற நாட்களில் வருவதைவிட தேர்தல் நேரத்தில் வருவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், அரசியல் அறிவையும் இந்தியாவின் ஜனநாயக தன்மையையும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.