விவசாய சட்டங்களை அனைத்து மாநிலமும் எதிர்க்கிறதே.. என்ன பண்ணப் போறீங்க.. சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: விவசாய சட்டங்களை அனைத்து மாநிலங்களும் எதிர்க்கிறதே? இதனை சரி செய்ய என்ன செய்யப் போறீங்க? என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது மத்திய அரசுக்கு பல கேள்விகளை தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் முன்வைத்தது.
இன்றைய விசாரணையின் தொடக்கத்திலேயே, இந்த பிரச்சனையை மத்திய அரசு கையாளும் போக்கு அதிருப்தி அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுமே விவசாய சட்டங்களை எதிர்க்கிறதே.. இதனை எப்படி சரி செய்வீங்க? என மத்திய அரசிடம் கேள்வி கேட்டார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே.
அட்டர்னி ஜெனரலுக்கு குட்டு
இதனைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விவரிக்க முன்வந்தார். ஆனால் மிஸ்டர் அட்டர்னி, வேறு ஒரு அரசாங்கம் தொடங்கி வைத்தது என நீங்கள் சொல்வது எந்த வகையிலும் உதவாது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்றார். மேலும் விவசாயிகளுடன் என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் போப்டே கேள்வி எழுப்பினார்.
சிக்கலான சூழ்நிலை
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்துகின்றன; அதனால் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றார். இதை கேட்ட தலைமை நீதிபதி போப்டே, விவசாய சட்டங்களை திரும்பப் பெறுங்கள் என நாங்கள் சொல்லவில்லை. இது சிக்கலான சூழ்நிலையாகும் என்றார்.
நிறுத்தி வையுங்க..
மேலும், தற்போதைய சூழ்நிலையில் தீர்வு ஏதேனும் உருவாக்க முடியுமா? என்றுதான் பார்க்கிறோம். அதனால்தான் விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை ஏன் நீங்கள் நிறுத்தி வைக்கக் கூடாது? என கேட்கிறோம். பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் கால அவகாசம் தேவை என்கிறீர்கள். இந்த சட்டங்களை அமல்படுத்தாமல் பொறுப்புடன் நீங்கள் நடந்து கொண்டால்தான் நாங்கள் குழு அமைக்க முடியும். ஆனால் நீங்கள் சட்டத்தை அமல்படுத்தி கொண்டே இருக்கிறீர்களே? என்றும் போப்டே கேள்வி எழுப்பினார்.
நீங்க செய்றீங்களா? நாங்க செய்யவா?
அத்துடன் நீங்கள் விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்கப் போகிறீர்களா? அல்லது அதை நாங்கள் செய்யட்டுமா? என்னதான் பிரச்சனை? அவ்வளவு எளிதாக விவசாய சட்டங்களுக்கு நாங்கள் தடை விதித்துவிடமாட்டோம். விவசாய சட்டங்களை அமல்படுத்துவதைதான் நிறுத்த சொல்கிறோம். மக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான உணவுக்கும் குடிநீருக்கும் யார்தான் பொறுப்பு? களத்தில் பெண்களும் முதியவர்களும் இருக்கின்றனர்.
போராட்டத்தில் ஏன் முதியவர்கள்?
முதியவர்கள் எல்லாம் ஏன் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்? நாங்கள் போராட்டம் நடத்துவதை பற்றி எந்த கருத்தையும் சொல்லவில்லை.. நாங்கள் ஒரு குழுவை அமைக்க பரிந்துரைக்கிறோம். மத்திய அரசு விவசாய சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் விவசாய சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்தி வைப்போம் என்றார் தலைமை நீதிபதி போப்டே.