'நீங்க செஞ்சது ரொம்ப தப்பு..'டெல்லி சிறுமி பாலியல் வன்புணர்வு விவகாரம்..ராகுலுக்கு பேஸ்புக் நோட்டீஸ்
டெல்லி: 9 வயது தலித் சிறுமி டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அப்பெண்ணின் பெற்றோர் படத்தைப் புகைப்படத்தில் உடனடியாக நீக்குமாறு ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி நங்கல் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அங்குள்ள மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பேரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
டெல்லி போலீஸ் உள் துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால் இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருந்தார்.

ராகுல் காந்தி
இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில் அச்சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். ராகுல் காந்தியிடம் பேசிக் கொண்டு இருந்த போதே அச்சிறுமியின் தந்தை கதறி அழத் தொடங்குகிறார். உடனடியாக அவரை அரவணைத்துக் கொண்ட ராகுல், அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

பேஸ்புக் நோட்டீஸ்
இருப்பினும், இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். இது தொடர்பாக NCPCR எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை உடனடியாக நீக்குமாறு ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை
இதுகுறித்து என்சிபிசிஆர் அமைப்பின் தலைவர் பிரியங்க் கனூங்கோ கூறுகையில், "இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் எங்களுக்குப் பதில் அளித்துள்ளது. அந்த பதிவை உடனடியாக நீக்குமாறு ராகுல் காந்திக்கு பேஸ்புக் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஐடி சட்டம், போக்ஸோ, சிபிசிஆர் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை இன்னும் இரண்டு நாட்களில் எடுப்போம்" என்று அவர் குறிப்பிட்டார்.

ட்விட்டர்
முன்னதாக, இந்த விவகாரத்தில் NCPCR ட்விட்டர் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மிகவும் பாரபட்சமான முறையில் ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கைகளை எடுப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும், ட்விட்டர் நிறுவனத்திற்கு ட்விட்டர் பறவையைப் பொறித்து எடுத்து அதை டெல்லியில் உள்ள ட்விட்டர் அலுவலகத்துக்கு அனுப்பி நூதன முறையில் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

டெல்லி சிறுமி
டெல்லி நங்கல் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அருகிலிருந்த மயானத்திற்கு கூலரில் இருந்து தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் அந்தச் சிறுமி வீடு திரும்பவில்லை. அப்போது சுமார் 6 மணியளவில் அச்சிறுமியின் தாயை மயானத்தின் பூசாரி ராதேஷ்யம் என்பவர் அழைத்துள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் தயார் உடனடியாக போலீசாருக்கும் ஆம்புலன்ஸுக்கும் கால் செய்யும்படி கூறியுள்ளார். இருப்பினும், அவர்கள் அதற்கு மறுத்துள்ளனர்.

மிரட்டிய பூசாரி
மேலும் அந்த பூசாரி சிறுமியின் தாயிடம், "இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால், போலீசாருக்கு சொன்னால், அவர்கள் உடர்கூராய்வு செய்ய வேண்டும் எனச் சிறுமியின் உடலை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். சிறுமியின் உடல் உறுப்புகளைத் திருடிவிடிவார்கள்" என மிரட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும், பெற்றோரின் முழு சம்மதமில்லாமல் அவசர அவசரமாக அச்சிறுமியின் உடலை எரியூட்டியுள்ளனர். தங்கள் மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அச்சிறுமியின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாகப் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications