சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து.. சரியான முடிவு தலையிட விரும்பவில்லை.. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முன்மொழிந்த முறையை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103
இதனால் முதலில் +2 தவிர அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு +2 தேர்வு நடத்துவது தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
+2 பொதுத்தேர்வு ரத்து
அதில் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ உட்பட பல்வேறு மாநிலங்களிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 10,11ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு, +2ஆம் வகுப்பு பருவத் தேர்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ் முன்மொழிந்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இருப்பினும், இந்த முறைக்கு எதிராக சில பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாகப் பெற்றோர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட சில சந்தேகங்களுக்கு சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ தரப்பில் விளக்கம் தரப்பட்டது
தள்ளுபடி
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், பல தரப்பு ஆலோசனைக்குப் பின்னரே சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளன. எனவே, இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றனர். மேலும், சிபிஎஸ்இ முன்மொழிந்துள்ள மதிப்பெண் கணக்கீட்டு முறை சரியாகவே உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தனர்.
மதிப்பெண் கணக்கிடும் முறை
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 5 பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்கள் எடுத்துக் கொள்ளப்படும். அந்த 3 பாடங்களின் மதிப்பெண்களிலிருந்து 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அடுத்து, 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணிலிருந்து 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இறுதியாக +2 பருவத் தேர்வுகள் உட்பட இதர தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களிலிருந்து 40% மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த மூன்று மதிப்பெண்களையும் கூட்டி மாணவர்களுக்கு +2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முறையில் வழங்கப்படும் மதிப்பெண்களால் திருப்தியடையாத மாணவர்கள் விரும்பினால் தேர்வு எழுதலாம் என்றும் தேர்வு நடத்தக் கூடிய சூழல் அமையும்போது அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.