எங்கும் நகர மாட்டோம்.. போராடும் இடத்தில் கான்கிரீட் வீடுகளை கட்டும் விவசாயிகள்.. அதிகாரிகள் செம ஷாக்
டெல்லி: தலைநகரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் செங்கல் மற்றும் கான்கிரீட்டை பயன்படுத்தி வீடுகளைக் கட்ட தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 100 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கப்பட்டது. டிசம்பர் மாதம் டெல்லியில் கடும் குளிர் நிலவியது. இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல விவசாயிகள் உயிரிழந்தனர்.
கோடைக் காலம்
இந்நிலையில், அடுத்து வரும் கோடைக் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வெளியிலிருந்து தப்பிக்க சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது போலத் தெரியவில்லை. இதனால் நீண்ட காலம் போராடும் வகையில் இடத்தை தயார் செய்கிறோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கான்கிரீட் கட்டுமானம்
இதுவரை இரண்டு மூன்று கட்டுமானங்களை விவசாயிகள் எழுப்பியுள்ளனர். திக்ரியில் விவசாயிகள் இரண்டு வீடுகளைக் கட்டியுள்ளனர். செங்கல் மற்று கான்கிரீட்டை பயன்படுத்தி இந்த வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேற்புரம் மூங்கிலால் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் காற்றோட்டம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்தக் கட்டுமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாகத்தைத் தணிக்க இதில் விவசாயிகள் ஏசிகளை வைக்கவும் விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர்.
புதிய வீடுகள்
தற்போது வரை இரண்டு வீடுகள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் பக்கத்தில் இருக்கும் கடைகளில் இருந்தே வாங்கப்பட்டுள்ளது.அதேநேரம் புதிதாக வீடுகளைக் கட்டவும் ஹரியானாவில் இருந்து செங்கல் மற்றும் சிமெண்ட்டையும் லாரிகள் மூலம் விவசாயிகள் எடுத்து வர தொடங்கியுள்ளனர். கோடைக் காலத்தில் இதுபோன்ற கட்டுமானங்களே தங்களைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுமதி இல்லை
எவ்வித அனுமதியும் பெறாமல் விவசாயிகள் இதுபோன்ற கட்டுமானங்களை எழுப்புவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த தற்போது வரை கட்டப்படும் கட்டுமானங்கள் ஹரியானாவுக்குச் சொந்தமான பகுதியில் நடைபெறுவதால் தங்களால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கு பகுதியில் சில விவசாயிகள் இரண்டு மாடி குடியிருப்பைக் கட்ட தொடங்கினர். அப்போது ஹரியானா அதிகாரிகள் கட்டுமான பணிகளை நிறுத்தினர். மேலும், மீண்டும் விவசாயிகள் கட்டுமான பணிகளைத் தொடங்குவதைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டுள்ளது. எவ்வித நிரந்த கட்டுமானத்தைக் கட்டக்கூடாது என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதேநேரம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சிங்கு பகுதியில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் திக்ரி எல்லையில் கட்டுமானங்கள் தொடர்கிறது.