டெல்லியில் முடிவுக்கு வந்தது போராட்டம்... வெற்றிக் களிப்புடன் வீடு திரும்பும் விவசாயிகள்
டெல்லி: விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
போராட்டம் நிறைவு பெற்றதை அடுத்து டெல்லியில் தங்களது கூடாரங்களை காலி செய்த விவசாயிகள் வீடு திரும்ப தொடங்கி உள்ளனர். தற்போது டெல்லி மாநில எல்லையில் வெற்றிக் களிப்புடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியுடன் விவசாயிகள் வீடு திரும்ப தொடங்கி உள்ளனர்.

வேளாண் மசோதா நிறைவேற்றம்
2020ம் ஆண்டு விவசாய விளைபொருள்களுக்கான விற்பனை, பதுக்கல், விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தல் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான விவசாய சீர்திருத்தங்களை கையாளுதல் தொடர்பாக 3 அவசர சட்டங்களை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்திருந்தது. பின்னர் புதிய வேளாண் சட்ட மசோதா மாநிலங்களைவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த 3 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து 3 வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. அதாவது (1) வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020 (2) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020 (3) அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை
இந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். இந்த சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 25, 2020 அன்று நாடு முழுவதும் விவசாயக தொழிற்சங்கங்கள் முழு அடைப்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமானது. உத்தரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு விவசாயிகள் பேரணியாக செல்ல ஆரம்பித்தனர். விவசாயிகளை அப்புறப்படுத்த கண்ணீர்புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல்துறையினர் கலைக்க முயன்றனர்.

பலக் கட்டப் பேச்சு தோல்வி
இதையடுத்து மத்திய அரசு 2020ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறவேண்டும், விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும், போராட்டங்கள் காரணமாக விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆனால் விவசாயிகளுடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

போராட்டத்தின்போது 700 விவசாயிகள் பலி
பல இன்னல்களுக்கு நடுவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வந்தனர். இந்த போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 3ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது போராட்டக்குழுவினர் மீது கார் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் காரை ஓட்டி வந்ததாகவும், அவர்தான் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதை அடுத்து அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

3 சட்டங்களும் வாபஸ்
இந்நிலையில் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். மேலும் விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம். ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரவியதால் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிறோம என தெரிவித்தார்.

போராட்டத்தை கைவிடவில்லை
ஆனால் இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் சட்டப்பூர்வமாக திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதையடுத்து
நாடாளுமன்ற குளிர்காலக்கூடத் தொடரில் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் வாபஸ் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தில் பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

ஆட்டம் பாட்டத்துடன் செல்லும் விவசாயிகள்
தற்போது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்பதாக உறுதி அளித்த நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள சிங்க், காஸிபூர், திக்ரி எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் வீடு திரும்பும் பணிகளில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து வந்த விவசாயிகள் தங்கள் கூடாரங்களை அகற்றி, வைத்திருந்த பொருட்களை டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். சிலர் பாங்ரா நடனம் ஆடிக் கொண்டே தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெண் விவசாயிகளும் அவர்களுடன் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கி விட்டனர்.

10-ஆம் தேதி போகாதது ஏன்?
9 ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் வாபஸ் என அறிவித்தார்கள். ஆனால் 10-ஆம் தேதி காலி செய்யாமல் ஏன் 11 ஆம் தேதி காலி செய்தார்கள். இதுகுறித்து விவசாயி கோல்டன் கூறுகையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 10-ஆம் தேதி டெல்லியில் நடந்தது. துக்கமான அந்த நேரத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக போவது மிகவும் தவறு , மனிதநேயமில்லாத செயல் என்பதால் ஒரு நாள் கழித்து 11 ஆம் தேதி காலி செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications