எப்போது 2ஆம் டோஸ் போட்டுக் கொண்டீர்கள்? பூஸ்டர் டோஸ் எப்போது எடுக்கலாம்.. வெளியான அதிமுக்கிய தகவல்
டெல்லி: வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் precaution dose எனப்படும் கூடுதல் டோஸ் போடும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், 2ஆம் டோஸ் செலுத்தி எத்தனை மாதத்திற்குப் பிறகு 3ஆவது டோஸ் போடப்படும் என்பது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!
நாட்டில் தற்போது வரை 125 கோடி வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. இதுவரை 60% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினும் 41% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது.
இந்தியா வேக்சின் பணிகள்
இதனிடையே தற்போது எழுந்துள்ள ஓமிக்ரான் அச்சம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பூஸ்டர் டோஸ் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில ஆய்வாளர்கள் பூஸ்டர் டோஸ் மூலம் ஓமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் பணிகளைத் தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடங்கி சுகாதார ஊழியர்கள் வரை பலரும் வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் இந்தியாவில் precaution dose எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
ஓமிக்ரான் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சுகாதாரத் துறை ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடப்படும். அதேபோல 60 வயதைக் கடந்தவர்களும் இணை நோய் உள்ளவர்களும் கூட மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
3ஆவது பூஸ்டர் டோஸ்
இந்நிலையில், 2ஆவது டோஸுக்கும் இந்த 3ஆவது முன்னெச்சரிக்கை டோஸுக்கும் இடையே எத்தனை காலம் இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் முன்னெச்சரிக்கை டோஸுக்கு இடையேயான இடைவெளி என்பது 9 முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம்.
டோஸ் இடைவெளி
இது தொடர்பாக நோய்த்தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய தொழில்நுட்ப வலுலநர் ஆலோசனைக் குழு ஆலோசித்து வருகிறது. தற்போது இந்தியாவில் வேக்சின் பணிகளில் பெரும்பாலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. டோஸ்களுக்கு இடையிலான காரணம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மிக விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு
உலகெங்கும் பூஸ்டர் டோஸ் என்று அழைக்கப்படும் இந்த 3ஆவது டோஸ் தான் கொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் தனது மக்களுக்கு 3 டோஸ் வேக்சின்களை செலுத்தி முடித்துவிட்டு, தற்போது 4ஆவது டோஸ் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரம் அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களுக்கும் 2 டோஸ் வேக்சின் செலுத்தும் வரை பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்றே உலக சுகாதார அமைப்பு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.