கணிதத்தில் கெட்டிக்காரர்கள் யார்? மாணவிகளா.. மாணவர்களா.. கல்வி அமைச்சகத்தின் சர்வேயில் ‛சர்ப்ரைஸ்’
டெல்லி: இந்தியா முழுவதும் மாநிலங்கள் வாரியாக மாணவ-மாணவிகளின் கற்றல் திறன் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் பாடவாரியாக கற்றல் திறனில் சிறந்தவர்கள் மாணவிகளா? மாணவர்களா? என்பதற்கு விடை கூறப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் அடிக்கடி மாணவ-மாணவிகளின் கற்றல் திறன், மாநிலங்களின் கல்வி அறிவு, தேர்ச்சி சதவீதம் தொடர்பாக பல்வேறு சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‛நேஷனல் அச்சிவ்மென்ட் சர்வே' மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சர்வே நடந்தது.

34 லட்சம் மாணவர்கள்
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சிபிஎஸ்சி சார்பில் தேசிய தகவல் மையம் உருவாக்கிய தொழில்நுட்ப இணையதளம் வழியாக சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்தியா முழுவதும் மொத்தம் 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் பஙகேற்றனர். இதில் கிராமப்புறம், நகர்புறங்களில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இவர்கள் 3, 5, 8, 10 வகுப்புகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

22 மொழிகளில் சர்வே
இந்த சர்வேயின்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த கேள்விகள் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்கு மாணவ-மாணவிகள் பதிலளித்தனர். இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இதற்கு முன்பு 2017 ல் மேற்கொண்ட சர்வேக்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இருப்பினும் சில விஷயத்தில் மாணவ-மாணவிகள் இடையே மாற்றம் காணப்பட்டுள்ளது.

பெண்களின் கற்றல் திறன் அதிகரிப்பு
அதன்படி 2017 சர்வேயை ஒப்பிடும்போது மாணவர்களை விட மாணவிகளின் கற்றல் செயல்திறன் சிறப்பாக இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களை விட எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களின் கல்வித்திறன் குறைவாக இருப்பது கவலையளிக்கும் வகையில் உள்ளது. மேலும் 2017 சர்வேயை ஒப்பிடும்போது கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் குறைந்துள்ளதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதோடு மேல்நிலை வகுப்புக்கான கணித பாடத்தை தவிர பிற இடங்களில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

துவக்க நிலையில் சமம்
அதாவது துவக்க நிலை வகுப்புகளில் மாணவ-மாணவிகள் இடையே கணித பாடத்துக்கான அறிவு ஏறக்குறைய சமமாக உள்ளது. ஆனால் படிக்கும் வகுப்புகள் அதிகரிக்க அதிகரிக்க மாணவிகளை ஒப்பிடும்போது கணித பாடங்களில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதும், மாணவ-மாணவிகள் இடையேயான கணிதம் கற்றல் திறனுக்கான இடைவெளி அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.

வித்தியாசம் என்ன?
அதாவது 3ம் வகுப்பில் கணித பாடத்தில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 301 ஆகவும், இது மாணவர்களுக்கு 300 ஆகவும் உள்ளது. இது ஏறக்குறைய சமமாக உள்ளது. ஆனால்10ம் வகுப்பு கணித பாடம் கற்றல் திறனை பொறுத்தமட்டில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 216 ஆகவும், மாணவர்களின் சராசரி மதிப்பெண் 219 ஆகவும் உள்ளது. இதன்மூலம் உயர்வகுப்பில் கணித பாடத்தை மாணவிகளை விட மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்வதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் கணித பாடத்தை பொறுத்தமட்டில் வகுப்பு 3ல் கடந்த சர்வேயில் 6 மாநிலங்களில் முன்னனியில் இருந்த மாணவிகள் தற்போது 16 மாநிலங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.

மொழிப்பாடத்தில்...
அதேநேரத்தில் வகுப்பு 3யை அடிப்படையாக கொண்ட மொழிப்பாடத்தில் 33 மாநிலங்களில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். இது கடந்த 2017 சர்வேயில் 18 மாநிலங்களில் மட்டுமே மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அதேபோல் வகுப்பு 5ல் மொழிப்பாடத்தில் மாணவர்களை விட மாணவிகள் 33 மாநிலங்களில் சிறப்பாக செயல்படுகின்றனர். இது கடந்த சர்வேயில் 16 மாநிலம் என்ற அளவில் மட்டுமே இருந்தது.












Click it and Unblock the Notifications