எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருப்போருக்கு நற்செய்தி! ரயில் நிலையங்களில் வருகிறது சார்ஜிங் வசதி!
டெல்லி: எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருப்போருக்கு நற்செய்தியாக நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கப்படுகிறது.
2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கு நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.
நாட்டில், கடந்த டிசம்பர் மாதத்தில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தமாக 50,866 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. 2020 டிசம்பர் மாதத்தில் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 240 சதவீதம் அதிகமாக விற்பனையாகி உள்ளது.

மின்சார வாகனம்
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படுவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் இதுகுறித்து கூறுகையில், '' இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் வசதி விரைவில் கொண்டுவரப்படும். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்துள்ளது.

சார்ஜிங் நிலையம்
இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி இந்தியாவில் குறைவாக உள்ளது. அதனால் மின்சார வாகனங்களின் விற்பனையும் குறைகிறது என புகார்கள் வந்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான வரைவுக் கொள்கையை நிதி ஆயோக் தயாரித்து ரயில்வேயிடம் வழங்கியுள்ளது.

பயன்பாடு
மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு இந்தத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மத்திய அரசின் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் மின்சார வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரயில் நிலையங்கள்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 123 ரயில் நிலையங்களில், இந்த சார்ஜிங் வசதியை உடனடியாக செயல்படுத்த ரயில்வே நிர்வாகத்துடன் பேசியிருக்கிறோம். 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்'' என்று நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications