கோவிஷீல்டு டோசேஜ் இடைவெளி.. 12-16 வாரங்களாக அதிகரிப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு திடீர் காரணம் என்ன
டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியை 6 முதல் 8 வாரங்களில் இருந்து, 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளே பயன்படுத்தப்படுகிறது.
மின்வாரிய ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படுவார்களா? .. மின்துறை அமைச்சர் சூப்பர் பதில்!
18+ அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதும், தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்களிலும் 18+ அனைவருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படவில்லை.
பெரும் தட்டுப்பாடு
பல மாநிலங்களிலும் தட்டுப்பாடு காரணமாக 45+ மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளே பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக முதல் டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்கள் சரியான நேரத்தில் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் டோஸின் பயனும் கிடைக்காதோ என அஞ்சப்படுகிறது.
கால இடைவெளி அதிகரிப்பு
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியை அதிகரிக்க நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று பரிந்துரைத்துள்ளது. தற்போது 6 முதல் 8 வாரங்களாக இருக்கும் இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே, தடுப்பூசிக்கான தேசிய வல்லுநர் குழுவிடம் அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம் கோவாக்சின் தடுப்பூசியின் கால இடைவெளியில் (4-6 வாரங்கள்) மாற்றம் இல்லை.
காங்கிரஸ் விமர்சனம்
இந்த பரிந்துரையைக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தடுப்பூசியின் தட்டுப்பாட்டை மறைக்கவே இது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கப்படுவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் முத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், முதலில் 4-6 வாரங்கள் என்றார்கள், பிறகு 6-8 வாரங்கள் என்றார்கள், இப்போது 12-16 வாரங்கள் என்கிறார்கள். இது வல்லுநர்களின் பரிந்துரை அடிப்படையிலா அல்லது தடுப்பூசி பற்றாக்குறையை மறைக்கவா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளி 28 நாட்களில் இருந்து 6 முதல் 8 வாரங்களாக மாற்றப்பட்டது. அப்போது 6 முதல் 8 வார இடைவெளியில் தடுப்பூசியை அளித்தால் அதிக தடுப்பாற்றல் கிடைப்பதாகவும் எட்டு வாரத்தைத் தாண்டினால் பலன் அளிக்காது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பலன் அதிகரிக்கிறது
ஆனால், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கோவிஷீல்டு டோஸ்களின் கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம், அதன் தடுப்பாற்றலை அதிகரிக்க முடிவது தெரியவந்துள்ளது. சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 12 அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்கள் இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசியை அளித்தால் அதன் பலன், 26.2 சதவீதம் வரை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீரம் நிறுவனம்
அதேநேரம் மத்திய அரசின் இந்த பரிந்துரை என்பது சீரம் நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி தேவையை சீரம் நிறுவனத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கோவிஷீல்டு உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆகஸ்ட் முதல் மாதம்தோறும் 10 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருந்தது.