சவாரி கேன்சல்.. 20 ரூபா சேர்த்து கொடுங்க - “இனி நடந்தால்” ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை!
புதுடெல்லி: நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிசெய்து கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓலா, ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி செயலிகள் குறித்து சமீபமாக அதிகளவில் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஓட்டுநர்கள் கூடுதல் தொகை கேட்பது, அருகே உள்ள இடங்களுக்குச் செல்வதாக இருந்தால் சவாரியை ரத்து செய்வது போன்றவை குறித்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்தக் குறைகளை களைவதற்கான முயற்சிகளை எடுக்காவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

குவிந்த புகார்கள்
ஓலா, ஊபர் போன்ற செயலி வழி கால் டாக்ஸி நிறுவனங்கள் மீது பொதுமக்களின் புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமான நாட்களில் கட்டணத்தை உயர்த்திக் கொள்வது, இரவு நேரங்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பது, பதிவு செய்த பிறகு ரத்து செய்ய ஓட்டுநர்கள் கட்டாயப்படுத்துவது, ஓட்டுநர்கள் கூடுதல் தொகை கேட்பது, பயணத்தை ரத்து செய்தால் அபராத கட்டணம் வசூலிப்பது, அருகே உள்ள இடங்களுக்குச் செல்வதாக இருந்தால் பயணத்தை ஓட்டுநர்கள் ரத்து செய்வது என இந்த கால் டாக்ஸி செயலிகள் குறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், கால் டாக்ஸி நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய நுகவர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களின் புகார்கள் தொடர்ந்தால் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஓலா - ஊபர்
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், வாடகை கார்களுக்கான செயலிகள், நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, சவாரி ரத்து செய்வது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடைபெற்றது. இதில் ஓலா, ஊபர், மேரு, ரேபிடோ, ஜக்னூ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்துகொண்டன எனத் தெரிவித்தார்.

கடுமையான நடவடிக்கை
மேலும், இந்தக் கூட்டத்தில் கால் டாக்ஸி நிறுவனங்கள் மீது நுகர்வோர் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மற்றும் அவை சம்பந்தமான புள்ளிவிபரங்கள் நிறுவனங்களிடம் காட்டப்பட்டுள்ளன.
இந்தக் குறைகளை களைவதற்கான முயற்சிகளை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர்களிடம் எச்சரித்துள்ளோம். நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் அரசு கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாது என்றும் அவர்களிடம் தெரிவித்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications