பெட்ரோல், டீசல் மீது.. கூடுதல் வரி உண்மைதான், ஆனால்... விளக்கும் இணை அமைச்சர் அனுராக் தாகூர்
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிய விவசாய செஸ் வரி விதிக்கப்பட்டதற்கு ஏற்ப, அடிப்படை செஸ் வரி குறைக்கப்பட்டால், ஒட்டுமொத்த வரி விதிப்பில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்தது. இதனால் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த வருமான இழப்பை ஈடுசெய்யும் வகையில், ஒபெக் நாடுகள் தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
5 மாநில சட்டசபைத் தேர்தல் : பெட்ரோல் டீசல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை
பெட்ரோல் விலையேற்றம்
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் தொடர்ந்து உயர்ந்தது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டன. இதன் காரணமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூடுதல் வரி இல்லை
பெட்ரோலிய பொருட்கள் மீது மத்திய அரசு விவசாய செஸ் வரியாகக் கூடுதல் வரியை விதிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் ராஜ்ய சபாவில் கூறுகையில், "பெட்ரோலிய பொருட்கள் மீது புதிய செஸ் வரி விதிக்கும் திட்டம் இல்லை. தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீது நாட்டில் சாலை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த செஸ், சிறப்புக் கூடுதல் கலால் வரி, விவசாய உள்கட்டமைப்பு செஸ் ஆகியவை வசூலிக்கப்படுகிறது" என்றார்.
நிதியமைச்சர் அறிவிப்பு
முன்னதாக, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி படெஜட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாய செஸ் வரியாக பெட்ரோல் மீது 2.5 ரூபாயும் டீசல் மீது 4 ரூபாயும் விதிக்கப்படும் என அறிவித்தார். இருப்பினும், ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்குக் கூடுதல் பாரம் அளிக்கக் கூடாது என்பதற்காக அடிப்படை கலால் வரி, சிறப்புக் கூடுதல் கலால் வரி ஆகியவை குறைக்கப்பட்டது. இதுதான் தற்போது கூடுதல் வரி என்று தவறாகப் பரவியுள்ளது.
ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல்
அதேபோல பெட்ரோல் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக முன் வைக்கப்படுகிறது. இது குறித்து அனுராக் தாகூர் கூறுகையில், "பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரை தேவைப்படும். ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் சேர்க்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் இதுவரை எந்த பரிந்துரையும் செய்யவில்லை" என்றார். முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதே பதிலையே அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.