நாட்டில் 30 கோடி மக்களுக்கான தடுப்பூசி செலவை மட்டுமே அரசு ஏற்கும்.. கொரோனா தடுப்பு குழு தலைவர்!
டெல்லி: நாட்டில் முதல்கட்டமாக 30 கோடி நபரகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் இதற்கான செலவை மட்டுமே மத்திய அரசு ஏற்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய கொரோனா தடுப்பு பணிக்குழுவின் தலைவருமான டாக்டர் வினோத் பால் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொதுமக்களுக்கு விரைவில் அளிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது. விரைவில் இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி செய்து வரும் சீரம் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அண்மையில் பரிசீலித்தது. இந்த நிறுவனம் இன்று அவசர காலபயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை கொரோனா தடுப்பூசி மருந்து போடுவதற்கான ஒத்திகை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய கோவிட் -19 தடுப்பு பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வினோத் பால், நாட்டில் முதல்கட்டமாக 30 கோடி நபரகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் இதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும். அடுத்த 6-8 மாதங்களில், சுகாதார பணியாளர்கள் , பாதுகாப்பு படையினர் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. நாடு முழுவதும் 31 மையங்கள் மூலம் தடுப்பூசி போடுதற்காக 29,000 இடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க நாடு முழுவதும் ஏற்கனவே நிறைய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாங்கள் நாடு முழுவதும் குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறோம். அரசு இயந்திரங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா தொடர்பான இறப்புகளை குறைக்க விரும்புகிறோம். அதற்காக அதிகக ஆபத்து உள்ளவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்து தடுப்பூசி அளிக்க உள்ளோம். அத்துடன் கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக மக்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக எதிர்காலத்தில் மருந்தின் கையிருப்பு திறனை அதிகரிக்க போகிறோம். ஒட்டுமொத்த தேசத்திலும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications