5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை
ராஜஸ்தான்,டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிசாவில் 5 நாட்கள் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்கப் போகிறது. மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அனல் காற்று வீச ஆரம்பித்து விட்டது.
வட இந்தியாவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. சாலைகளிலேயே ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் பட்டையை கிளப்புகிறது. வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், ஆந்திராவை தொடர்ந்து தொழிற்சாலைக்கு மின்தடை அறிவித்த 3வது மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. அதேபோல கிராமப் பகுதிகளிலும் மின்தடை நிலவி வருகிறது.

5 நாட்களுக்கு வெயில்
இதுகுறித்து வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமனி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்
தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் பதிவாகி வருகிறது. அது 113 டிகிரி பாரன்ஹீட் ஆகும். அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும்.

அனல் காற்று வீசும்
தற்போது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. டெல்லியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. டெல்லியில் இன்று 44 டிகிரி செல்சியஸ் பதிவாகும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும்.

ஆரஞ்ச் அலர்ட்
வெப்பநிலை அதிகரிப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என ராஜஸ்தான்,டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. இங்கு அதிக வெப்ப நிலை காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் தகிக்கும் வெயில்
ஒடிசாவில் தொடர்ந்து 3வது நாளாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதிக வெயில் காரணமாக ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் அதிக வெப்பம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications