மிக விரைவில் 3ஆம் அலை? அரசு கூறியதை போல டிசம். 31க்குள் அனைவருக்கும் வேக்சின் சாத்தியமா? முழு தகவல்
டெல்லி: இந்தியாவில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வேக்சின் போடப்பட்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் இது சாத்தியமான ஒன்று தானா என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது.
உலகில் தற்போது இருக்கும் சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே வைரஸை தடுக்க ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது வரை வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முறையான வழிமுறைகள் உருவாக்கப்படவில்லை.
அதேபோல பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளிலும் 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் எளிதாக கொரோனாவை வெல்ல முடிவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேக்சின் போடும் பணிகளை உலக நாடுகள் வேகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேக்சின் பணிகள்
இந்தியாவைப் பொறுத்த வரை கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் தற்போது பல வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி வேக்சின்களை கொண்டே தடுப்பூசி பணிகள் முக்கியமாக நடைபெற்று வருகிறது. செப்டமரில் அடுத்த அலை தாக்கக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், அதற்குள் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின்களை போட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டிசம்பர் 31
அதேநேரம் முன்னதாக 2ஆம் அலைக்குப் பின்னர், நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வேக்சின் போடப்படும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது. எத்தனை பேருக்கு கொரோனா வேக்சின் போட்டுள்ளோமோ அந்தளவு அடுத்த அலையில் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வாளர்களும் கூறி வருவதால், வேக்சின் பணிகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்முறையாக ஒரே நாளில் 1.03 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டது.

தற்போது வரை
வேக்சின் பணிகள் வேகம் பெற்றாலும்கூட, மத்திய அரசு கூறியதைப் போல இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வேக்சின் போட முடியுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 2 டோஸ் வேக்சின் போட மொத்தம் 188 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி நமக்குத் தேவை. அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் இதுவரை 62.29 கோடி பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதாவது மக்கள்தொகையில் 51% பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

தினசரி ஒரு கோடி
அதேபோல 18 வயதைக் கடந்தவர்களில் 15% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதாவது அடுத்த 125 நாட்களில் சுமார் 125 பேருக்கு நாம் வேக்சின் போட்டிருக்க வேண்டும். அதாவது மத்திய அரசு அறிவித்தபடி அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள் வேக்சினை போட்டு முடிக்க ஆகஸ்ட் 27ஆம் தேதியைப் போலத் தினசரி ஒரு கோடி பேருக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நாம் வேக்சின் போட வேண்டும். இதற்குத் தேவைப்படும் வேக்சின்களை தயார் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஒப்பந்தங்கள்
அதாவது ஆகஸ்ட் தொடங்கி டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 136 கோடி வேக்சின்கள் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாதம்தோறும் 25 முதல் 28 கோடி வேக்சின்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சைடஸ் கேடிலா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி மூலம் 5 கோடி வேக்சின்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர Panacea Biotech என்ற நிறுவனமும் ஸ்புட்னிக் வி வேக்சினை தயாரிக்கும் நிலையில், அதிலிருந்து சுமார் 2.5 டோஸி டோஸ் கிடைக்கும். இதில் சைடஸ் கேடிலா வேக்சினை 3 டோஸ்களாக செலுத்த வேண்டும் என்பதால் வெறும் 84 லட்சம் பேருக்கு மட்டுமே அதன் மூலம் வேக்சின் போட முடியும்.

141 கோடி வேக்சின்
இப்படி பல்வேறு ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு சுமார் 141 கோடி வேக்சின் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் சுமார் 70 கோடி பேருக்கு முழுமையாக வேக்சின் போட்டு முடிக்க முடியும். கடந்த ஜூலை மாதம் வரை நாட்டில் 10.35 கோடி பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, 13.65 கோடி பேருக்குச் செலுத்தக் கூடுதலாக 27.30 கோடி டோஸ்களை தேவைப்படுகிறது.

உற்பத்தி அதிகரிப்பு
மேலும், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இருந்தே மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் உற்பத்தி உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. அதேநேரம் கோவிஷீல்டு உற்பத்தி திட்டமிட்டபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அடிக்கடி ஒரு கோடி என்ற இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Recommended Video

சாத்தியமான இலக்கு தான்
மேலும், மாடர்னா, ஜான்சன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் முயற்சிகளிலும் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஜான்சன் தடுப்பூசி சிங்கள் டோஸ் வேக்சின் என்பதால், அதிகப்படியான மக்களுக்கு வேக்சினை போட முடியும். இவை தவிர கோவாவாக்ஸ், நோவாவாக்ஸ், பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசியில் செலுத்தக் கூடிய கொரோனா வேக்சின் ஆகியவற்றுக்கும் மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை மூலமும் மத்திய அரசுக்குக் கூடுதலாக வேக்சின்கள் கிடைக்கும். எனவே, இந்த ஆண்டிற்குள் அனைவருக்கும் கொரோனா வேக்சின் என்பது சாத்தியமான ஒன்றாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications