உலக அளவில் கொரோனா பாதிப்பு... 25 கோடியை எட்டும் அளவுக்கு எண்ணிக்கை உயர்வு..!
டெல்லி: கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.87 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் 25 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகானில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி மக்களை நிலை குலையச் செய்தது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் இன்னும் உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 கோடி 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இதில் 1 கோடியே 83 லட்சத்து 45 ஆயிரத்து 366 பேர் மட்டும் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூப்பர்!! தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. 11 மாவட்டங்களில் இரட்டை இலக்கில் வைரஸ் பரவல்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து நல்வாய்ப்பாக குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 53 லட்சத்து 89 ஆயிரத்து 635 ஆகும். இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உலகம் முழுவது 50 லட்சத்து 36 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை பொறுத்தவரை உலக அரங்கில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேஸில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. ஹாங்காங், ஏமன், நியூசிலாந்து மற்றும் இன்னும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து இயல்பு நிலை திரும்பியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.