இந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா?
டெல்லி: தலைநகரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படை விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து 352 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டியே பதிவாகி வருகிறது.
கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டிலுள்ள சுகாதார கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
ஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்
ஆக்சிஜன் தட்டுப்பாடு
குறிப்பாக, தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியுள்ள பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு மருத்துவர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி டெல்லியுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றன.
சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்கச் சிங்கப்பூரிலிருந்து காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்து சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்திய விமானப்படைக்குச் சொந்தமான IL 76 விமானம் மூலம் டெல்லிக்கு 352 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது சூழ்நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க இது உதவும்" என்று தெரிவித்தார்.
ஹைகோர்ட் கண்டனம்
டெல்லிக்குத் தேவையான முழு ஆக்சிஜன் கோட்டாவை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதிகள் கூறுகையில், "நீங்கள் டெல்லிக்குத் தேவையான 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மாட்டீர்களா? இங்கு நிலவும் நிலையைப் பார்த்தும் பார்க்காதது போல நீங்கள் இருக்கலாம். ஆனால் எங்களால் அப்படி இருக்க முடியாது" என்று தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இஸ்ரேல் நாட்டிலிருந்து உதவிகள்
சிங்கப்பூர் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்து உதவிகளை அனுப்பி வருகின்றன. இஸ்ரேல் நாட்டிலிருந்து இன்று மருத்துவ பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைக் கொண்டிருந்தது. முன்னதாக நேற்று பிரிட்டன் நாட்டிலிருந்து சுமார் 900 டன் மருத்து ஆக்சிஜன் இந்தியா எடுத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.