சரியாக ஆய்வு செய்யாமல் கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தினால் பேரழிவு: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: சரியாக ஆராய்ச்சி செய்யாமல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால் அது பேரழிவை கொண்டு வந்துவிடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரியவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு 12 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கும், எப்போது தடுப்பூசி ஆய்வு பணிகள் நிறைவடையும், மேலும் இதற்கு ஒரு கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் ஆஜராகி வாதிட்டார். டிஎன் பட்டேல் மற்றும் ஜோதி சிங் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கிய டெல்டா வைரஸ்.. ஆனால் பெரிய பாதிப்பு இல்லை - ஐசிஎம்ஆர் ஆய்வு
அப்போது நீதிபதிகள் கூறுகையில், உரிய வகையில் ஆராய்ச்சிகள் நடைபெறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும். ஆராய்ச்சி விவகாரங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தனர் .
முன்னதாக, ஜைடஸ் கேடில்லா என்ற நிறுவனம் 12 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆய்வு பணிகளை நிறைவு செய்து விட்டதாகவும், அனுமதி உள்ளிட்ட சில வேலைகளுக்காக அந்த தடுப்பூசி காத்திருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.