குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசை.. மோடியின் பெயரில் போலி வெப்சைட்... பலே ஐஐடி பட்டதாரி கைது
டெல்லி: பிரதமர் மோடி புகைப்படத்துடன் போலி வெப்சைட் நடத்திய ஐஐடி முதுகலைப் பட்டதாரி, அதில் மோடி அரசு இலவசமாக அனைவருக்கும் லேப்டாப் தர உள்ளதாக உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பான புகாரை அடுத்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் நகூர் மாவட்டம் புந்த்லோட்டா நகரைச் சேர்ந்தவர் ராகேஷ் சென்கித்(23), இவர் இந்த ஆண்டு தான் ஐஐடியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் (http://www.modi-laptop.wishguruji.com) என்ற பெயரில் போலியான வெப்சைட் ஒன்றை பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா லோலோகவுடன் ஆரம்பித்துள்ளார். அந்த இணையதளத்தில் ரிஜிஸ்டர் செய்தால் இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்றதை முன்னிட்டு 2 கோடி இலவச லேப்டாப் வழங்கப்போவதாக அதில் கூறியுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவியது. இரண்டே நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் அந்த இணையதளத்தில் லேப்டாப்புக்காக தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி புகார் எழவே டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர் அவர்கள் நடத்திய விசாரணையில் போலி வெப்சைட்டை நடத்துவது, ஐஐடியில் முதுகலை பட்டதாரியான ராஜஸ்தான் மாநிலம் புந்த்லோட்டா நகரைச் சேர்ந்த ராகேஷ் சென்கித்(23) என்பது தெரிய வந்தது.
ராகேஷ் சென்கித்துக்கு இணையதளம் நடத்தி சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தை ஆரம்பித்த ராகேஷ் அதில் கூகுள் விளம்பரத்தை போட்டுள்ளார். கூகுள் விளம்பர வருவாய வேண்டுமென்றால் அதிகப்படியான மக்கள் தனது தளத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட ராகேஷ், அதற்காக செய்த விஷயம் தான் மோடி இலவச லேப்டாப் திட்டம். இதன் மூலம் லட்சக்கணக்கானோர் இரண்டே நாளில் அந்த வெப்சைட் பார்த்துள்ளனர். ஏராளமானோரின் தனிப்பட்ட தகவல்களை சேர்த்துள்ளது விசாரணையில தெரியவந்துள்ளது.
ஐஐடியில் பட்டம் பெற்றதால் ஹைதராபாத்தில் வேலை கிடைத்தும், அந்த வேலைக்கு செல்ல விரும்பாத ராகேஷ், குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.