மீண்டும் திரும்பிய மே மாதம்.. டெல்லியில் நேற்றை விட 86 % அதிகரித்த கொரோனா
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு மீண்டும் அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இன்று 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை விட 86 சதவீதம் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் திடீரென உயர்ந்த கொரோனா.. சென்னையில் மட்டும் 294 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் புயல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது. டெல்லி மும்பை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைவிட இன்று கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டில் இருந்த போதும் தற்போது படிப்படியாக கொரொனா பாதிப்பானது தினசரி அதிகரித்து வருகிறது.
டெல்லியில் அதிகரிக்கும் பாதிப்பு
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் மும்பை டெல்லி போன்ற பெருநகரங்களில் பாதிப்பானது முதல் அலையில் இருந்தது போல தற்போது வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் நேற்று மட்டும் 496 பேர் பாதிக்கப்பட்டனர்.இது நேற்று முன் தினம் பதிவான பாதிப்பைவிட 50 சதவீதம் அதிகமான எண்ணிக்கையாகும்.
86% பாதிப்பு அதிகரிப்பு
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் டெல்லி இந்த அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்ததாகவும், இதில் 142 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக டெல்லியில் நேற்றை விட இன்று 86 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதாவது இன்று மட்டும் அங்கு 923 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கட்டுப்பாடுகள் தீவிரம்
அதே நேரத்தில் கொரோனா காரணமாக உயிரிழப்பு எதுவும் பதிவாக நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து 344 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,191 ஆக உள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தலைநகர் டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,45,102 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,107 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்தும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.