டெல்லியில் ஆங்கிலம் பேசியவர் மீது தாக்குதல்... நாயை ஏவி கடிக்க செய்த கொடூரம்... நடந்தது என்ன?
டெல்லி: டெல்லியில் ஆங்கில மொழியில் பேசிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த டாட்டூ கலைஞரை மர்மநபர் ஒருவர் தனது நாயை ஏவிவிட்டு கடிக்க செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் இந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தி மொழிக்கு ஆதரவான மத்திய அரசின் நிலைப்பாட்டை இந்த மாநிலங்கள் எதிர்த்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகம், கர்நாடக அரசியல் தலைவர்கள் எந்த ரூபத்திலும் இந்தி மொழியை அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றன. இந்நிலையில் தான் தலைநகர் டெல்லியில் ஆங்கிலத்தில் பேசிய நபர் மீது நாயை ஏவி கடிக்க செய்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
டாட்டூ கலைஞர்
உத்தர காண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் அஞ்சுமன் தாபா (வயது 27). டாட்டூ கலைஞர். இவர் வேலை தேடி டெல்லி சென்றார். தற்போது தெற்கு டெல்லியில் உள்ள கிரிக் விரிவாக்கம் பகுதியில் வசித்து டாட்டூ போடும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அஞ்சுமன் தாபா கடந்த 6ம் தேதி தண்ணீர் பாட்டில் வாங்க அருகே உள்ள கடைக்கு சென்றார். கடைக்காரரிடம் அவர் ஆங்கில மொழியில் உரையாடி கொண்டிருந்தார்.
நாயை ஏவி கடிக்க செய்த நபர்
இந்த வேளையில் வளர்ப்பு நாயுடன் ஒருவர் கடைக்கு வந்தார். அந்த நபர் அஞ்சுமன் தாபா மீது திடீரென்று தாக்குதல் நடத்தினார். தன்னை பற்றி ஆங்கில மொழியில் கடைக்காரரிடம் பேசுவதாக கூறி தாக்கினார். இதையடுத்து நான் யாரை பற்றியும் பேசவில்லை என அஞ்சுமன் தாபா கூறிய நிலையில் அந்த நபர் தனது நாயை ஏவி அவரை கடிக்க செய்தார். இதனால் அஞ்சுமன் தாபாவின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆங்கிலத்துக்கு எதிர்ப்பு
இதுபற்றி அஞ்சுமன் தாபா கூறுகையில், ‛‛கிர்கி விரிவாக்க பகுதியில் உள்ள கடைக்காரரிடம் ஆங்கிலத்தில் பேசினேன். அப்போது வந்த நபர் இடைமறித்து அவரை பற்றி பேசுவதாக நினைத்தார். நான் அப்படி எதுவும் பேசவில்லை என்றேன். இதையடுத்து ஆங்கிலம் பேசுவது தொடர்பாக என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கொலை செய்துவிடுவாரோ?
மேலும் என்னைநேபாளி என இனம்சார்ந்து அடையாளப்படுத்தி பேசினார். நான் டேராடூனை சேர்ந்தவர் என கூறியதால் என்னை பிடித்து இழுத்தார். நான் அவரது பிடியில் இருந்து விலகியபோது நாயை ஏவிவிட்டு கடிக்க செய்தார். நாய் என்னை பல இடங்களில் கடித்தது. நாயிடம் இருந்து தப்பிக்க கடையில் ஒழிந்தேன். என் தலைமுடியை பிடித்து மீண்டும் நாயை விட்டு கடிக்க செய்தார். நாய் விரட்டி விரட்டி என்னை கடித்தது. எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளதால் அந்த நபர் என்னை கொன்றுவிடுவாரோ என்ற பயம் உள்ளது'' என்றார்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி மால்வியா நகர் போலீசில் அஞ்சுமன் தாபா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் பெனிடா மேரி ஜெய்கார் கூறுகையில், ‛இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'என்றார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளம்பியுள்ளது.