ச்சா இவ்வளவா? ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் இந்தியர்கள்.. அதிர்ச்சி தரும் டேட்டா
டெல்லி: இந்தியர்கள் கொரோனா காலத்திலும் அதற்கு முன்பாகவும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) அதிக அளவு பயன்படுத்தியுள்ளதாக மருத்துவ ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர் என்று கூறும் இந்த இதழ், இந்த மருந்துகளில் பெரும்பாலானவை மத்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
'லான்செட்' ரீஜினல் ஹெல்த் ஆய்விதழில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சமீப காலமாக மருந்துகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வு செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆண்டிபயாடிக் மருந்து விற்பனை
கடந்த 2019க்கு முன்னர் அதாவது கொரோனா தொற்றுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆண்டிபயாடிக் விற்பனையை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மருந்துகள் முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட்டன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் குறித்து செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமிருந்தன.

ஆய்வு
இந்நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அசித்ரோமைசின் மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மருந்து, பாக்டீரியா நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு ஆபத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். அல்லது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் சந்தேகம் எழுந்தால் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால், வைரஸ் தொற்றுகளான மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளுக்கு கூட இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என இந்த ஆய்வின் ஆசிரியரான டாக்டர் முஹம்மது எஸ் ஹாஃபி கூறியுள்ளார்.

அதிர்ச்சி தகவல்கள்
இவ்வாறு இந்த மருந்து பரவலாக விநியோகிக்கப்படுவது மருந்தின் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் திறனை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் 1,098 தனித்துவமான ஃபார்முலாக்களின் மூலம் இந்த ஆண்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், 10,100 தனிப்பட்ட தயாரிப்புகள் (பிராண்டுகள்) இதனை விற்பனை செய்கின்றன. இவற்றில் 46% பிராண்டுகள் (19% ஃபார்முலேஷன்கள்) மட்டுமே, சுகாதார சேவைகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பொது இயக்குநரகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (சிடிஎஸ்சிஓ) சொந்தமானவை. அதாவது இவை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை என்று முஹம்மது எஸ் ஹாஃபி கூறியுள்ளார்.

ஆண்டிபயாடிக் எச்சங்கள்
இவ்வாறு இருக்கையில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிபயாடிக் விற்பனையை அதிகரித்துள்ள நிலையில், சுற்றுச்சூழலில் ஆண்டிபயாடிக் எச்சங்கள் அதிக அளவு இருப்பதையும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. நீர் ஆதாரங்கள், பால், மீன், இறைச்சி மற்றும் மருந்துகள் உட்பட பிற உணவுப் பொருட்களில் இதன் எச்சங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் ஆய்வாளருடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications