ராஜதந்திரம்.. மிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று 11வது சுற்று பேச்சு
டெல்லி: லடாக் மோதல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட படை நடவடிக்கை இந்தியா சீனா இடையே 11வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
Recommended Video
கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சீனா தனது படைகளை அதிக அளவில் குவித்து அத்துமீறலில் ஈடுபட்டதால் பதிலுக்கு இந்தியாவும் படைகளை குவித்து எல்லையில் இருந்து ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற முயன்றது. இரு தரப்பும் மாறி மாறி படைகளை குவித்ததால் போர் அபாயம் எழுந்தது.
இந்நிலையில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. அதன் தொடர்ச்சியாக பதற்றம் தணிந்தது. படைகளும் படிப்படியாக விலக்கப்பட்டு வருகின்றன.
10 சுற்று
இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 10வது சுற்று பேச்சின் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற்றன. இதன் மூலம் அங்கு பதற்றம் குறைந்துள்ளது.
பிரச்சனை
பங்கோங் சோ ஏரிக்கரையில் இருந்து படைகளை திரும்பப்பெற்றதை சீனா, இந்தியா இரண்டு நாடுகளுமே வரவேற்றன. அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நீண்டகாலமாக நீடித்து வரும் மீதமுள்ள பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியா கருத்து தெரிவித்தது.
ஒப்புதல்
இதனிடையே அங்கு அடுத்தகட்ட படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், பேச்சுவார்த்தையை நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.
11வது சுற்று பேச்சு
அதன்படி இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கான 11-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டாரில் இந்திய பகுதிக்குள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், லேயை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் 14-வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள்.
இந்தியா விருப்பம்
இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களில் இருந்து படைகளை விலக்குவது குறித்து இரு தரப்பும் விவாதிக்கும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பேச்சுவார்த்தை மூலம் கிழக்கு லடாக் முழுவதும் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்தியா விருப்பம்
இந்தியாவின் பார்வையில், கோடை காலம் துவங்குவதற்கு முன் கிழக்கு லடாக்கில் பதட்டங்களைத் தணிப்பது முக்கியம். ஏனென்றால், பனி உருகுவது படைகள் அத்துமீறலை எளிதாக்கிவிடும். இரு தரப்பினருக்கும் இடையில் சிக்கலுக்கு வழிவகுக்கும். கடந்த கோடையில் அத்துமீறல் தான் பெரிய அசம்பாவிதத்திற்கு காரணமாக இருந்தது.