ஒரே நாளில் 50 ஆயிரத்தை நெருங்கிய புதிய கொரோனா கேஸ்கள்.. உலகளவில் இந்தியா 2ஆவது இடம்
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,931 ஆனது. உலகளவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்தியாவில் 14 லட்சத்தை தாண்டியது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவை போல் இந்தியாவிலும் தினமும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று 49,055 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 49,931 கேஸ்கள் கண்டறியப்பட்டு இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14,35,453 ஆக உயர்ந்தது.

இந்தியா
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கை 49,931 ஆனது. இந்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. இதுவரை புதிய கேஸ்களில் ஒரே நாளில் 50 ஆயிரத்தை தாண்டியது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது இந்தியாவும் நெருங்கி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக புதிய கேஸ்கள்
உலகளவில் புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 55 ஆயிரம் கேஸ்களுடன் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 49 ஆயிரத்தை தாண்டிய கேஸ்களுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையின் போது முதல் முறையாக 40 ஆயிரம் கேஸ்கள் புதிதாக வந்தன. அது போல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,568 ஆகும். இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,85,114 ஆகும். இந்தியாவில் கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 32,771. கடந்த 24 மணி நேரத்தில் 708 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

34 சதவீதம்
இந்த வாரத்தில் கடந்த ஜூலை 20 முதல் 26-ஆம் தேதி வரை 3,17,892 பேர் புதிதாக நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கடந்த வாரத்தில் 2,37,999 கேஸ்கள் இருந்த நிலையில் இந்த வாரம் 34 சதவீதம் அதிகமாகும். அது போல் 7 நாட்களில் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5,315 ஆனது. ஆனால் கடந்த வாரத்தில் பலி எண்ணிக்கை 4,285 ஆக இருந்த நிலையில் இந்த வாரம் 24 சதவீதம் அதிகரித்துவிட்டது.

பலி எண்ணிக்கையிலும் அதிகம்
ஜூலை மாதம் 23-ஆம் தேதி முதல்முறையாக பலியானோர் எண்ணிக்கை 700-ஐ கடந்தது. அடுத்த நாள் 757 ஆக உயர்ந்தது. மகாராஷ்டிராவில் 267 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். அது போல் தமிழகத்தில் 85 பேரும், கர்நாடகத்தில் 82 பேரும், ஆந்திராவில் 56 பேரும் பலியாகிவிட்டனர். பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கையை போல் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 2,17,660 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications