‛சலாமி ஸ்லைசிங்’.. எல்லையில் சீனாவிடம் 26 ரோந்து பாயிண்டுகளை இழந்த இந்தியா.. பரபர தகவல்.. ஷாக்
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கு ஏராளமான ரோந்து பாயிண்டுகள் உள்ளன. இதி்ல 26 ரோந்து பாயிண்டுகளை சீனாவிடம் இந்தியா இழந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கிழக்கு லடாக்கில் மொத்தமுள்ள 65 ரோந்து பாயிண்டுகளில் 26 ரோந்து பாயிண்டுகளை சீனாவிடம் இந்தியா இழந்துள்ளதோடு, ‛சலாமி ஸ்லைசிங்' முறையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது என்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசிடம் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதற்கு உரிய முறையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போதைய சூழலில் சீனா இந்தியாவின் லடாக், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இதனால் அவ்வப்போது இந்தியா-சீனா எல்லையில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அரிய மண் தாதுக்கள் சந்தையில் கொடி கட்டிப் பறக்கும் சீனா- உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்து!
இந்தியா-சீனா மோதல்
இதனால் சீனாவையொட்டிய இந்திய எல்லை பகுதிகளில் எப்போதும் வீரர்கள் உஷாராக நிறுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட அருணாச்சல பிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யங்ங்ட்சி எல்லை இந்தியா-சீனா வீரர்கள் மோதி கொண்டுள்ளனர். ஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள் கையில் ஆயுதங்கள், கட்டைகளுடன் இந்தியாவுக்குள் அத்துமீற முயன்றனர். இதையடுத்து இந்திய வீரர்கள் 50 பேர் அவர்களை எதிர்த்து விரட்டினர். இதுபற்றி நாடாளுமன்றத்தில் ராணுவ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது, ‛‛எல்லைகளை பாதுகாக்க நமது படைகள் உறுதியாக உள்ளன. மோதலில் நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. படுகாயமும் அடையவில்லை. இருநாடுகளின் கமாண்டோக்கள் தலையீட்டால் வீரர்கள் தங்கள் நிலைக்கு திரும்பினர். அதன்பிறகு விதிகளின்படி இருநாடுகளின் கமாண்டோக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லையில் அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது'' என்றார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இதுஒருபுறம் இருக்க இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு மத்திய அரசும், பாஜகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியாவின் நிலப்பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கவில்லை. எல்லையில் ஊடுருவல் செய்யும் சீனாவின் முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன என கூறி வருகிறது.
26 ரோந்து பாயிண்டுகள் இழப்பு
இந்நிலையில் தற்போது இன்னொரு ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கிழக்கு லடாக்கில் இந்தியா தனது 26 ரோந்து பாயிண்டுகளை சீனாவிடம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் டிஜிபி மாநாடு நடந்தது. இதற்கு முன்பாக பாதுகாப்பு சவால்கள் குறித்த அறிக்கைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் இருந்து மத்திய அரசு பெற்றது. உயர் அதிகாரிகள் மட்டுமின்றி கீழ்நிலை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் அறிக்கைகளாக தாக்கல் செய்யப்பட்டன.
ஆய்வறிக்கையில் இருப்பது என்ன?
இதில் லடாக்கின் லே எஸ்பி பிடி நித்யா சார்பில் ஆய்வறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிழக்கு லடாக்கில் நம் ராணுவம் வழக்கமாக ரோந்து செல்லும் இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது. காரகோரத்தில் இருந்து சுமூர் பகுதி வரை மொத்தம் 65 ரோந்து மையங்கள் உள்ளன. இதில் 26 (பிபி 5-17; 24-32; 37, 51, 52, 62) இடங்களை சீனா ஆக்கிமரித்து வருகிறது. ‛சலாமி ஸ்லைசிங்' முறையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. என தெரிவிக்கப்பட்டது.
காரணம் என்ன?
மேலும் இந்த பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்ய முக்கிய காரணம் என்பது அங்கு மக்கள் இல்லாததும், ரோந்து பணி முறையாக செய்யாதததும் தான் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய இந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கூட இந்த அறிக்கை பற்றிய விபரங்கள் டிஜிபி மாநாட்டில் விவாதிக்கப்பவில்லை. மேலும் இந்த தகவலை மத்திய அரசு தரப்பு மறுத்துள்ளது. இதுபற்றி அவர்கள் தரப்பில் ‛‛எல்லையில் சீன ராணுவத்தில் எல்லை மீறும் நடவடிக்கைகளை விலக்கி கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எல்லையில் நமது நிலத்தை சீனாவிடம் நாம் இழக்கவில்லை'' என கூறியுள்ளது.